ஜூன் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் குறைந்தாலும், நாட்டின் சில்லறை பணவீக்கம் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நுகர்வோர் பணவீக்கம் அடிப்படையில் தான் சில்லறை பணவீக்கம் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 4.87 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஜூன் 2017இல் இது 1.46 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.07 சதவீதம் வரையில் உயர்ந்தது, அதன் பின்பு 5 மாதங்களுக்குப் பின் மீண்டும் 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
ஜூன் மாதத்தில் உணவு பணவீக்கம் 2.91 சதவீதமாக உயர்ந்துள்ளது எனத் தலைமை புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இக்காலக்கட்டத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம் 7.14 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது..
மத்திய அரசு நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை அடிப்படையாகவே ரிசர்வ் வங்கி நாணய கொள்கையை அமைத்து வருகிறது.