குடிநீரும், காற்றும் எல்லோருக்கும் பொதுவானது. கடலாக, நதியாக, நீர்வீழ்ச்சியாக, ஏரியாக, குளமாக, ஊற்றாக இடையூறு இல்லாமல் எல்லா உயிர்களும் தேவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இயற்கை இப்படித்தான் பெருந்தன்மையோடு படைத்து வைத்தது. ஆனால் கார்ப்பரேட் உலகத்தில் நிலைமையே மாறி விட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியால் பிவர்லி ஹில்ஸ் என்ற நிறுவனம் ஒரு லிட்டர் குடிநீரை 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் நாடு
தமிழகத்தில் குடிநீரை அரசே பாட்டில்களில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது போலப் பல தனியார் நிறுவனங்கள் குடிநீர் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது. அதேநேரம் உலகம் முழுவதும் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கி விட்டன.
காலிபானைகளுடன் சாலை மறியல், முற்றுகை, தர்ணா எனப் பல வடிவங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்தான் பீகார் மாநிலத்தில் ஒரு புரட்சி நடைபெற்றுள்ளது. இந்த உலகத்தில் இதுவும் கூட நம்ப முடியாத ஒன்றாகத்தான் உள்ளது.
பீகார்
சுலப் என்ற சர்வதேச அமைப்பு ஒன்று சுலப் சௌஜல்யா என்ற கருத்தாக்கத்தை முன்மொழிந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் தூய்மையான குடிநீரை மக்களுக்கு வழங்க முடிவு செய்தது. குளம் மற்றும் ஆற்று நீரை சுத்திகரித்துச் சுலப் ஜல் என்ற திட்டத்தின் மூலம் ஒரு லிட்டர் குடிநீரை 50 காசுகளுக்கு வழங்க உள்ளது. விலை குறைந்த இந்தப் புதுமையான திட்டம் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது.
சுலப்
சுலப் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் பின்டேஸ்வர் பதக், தர்பங்காவில் கடந்த சனிக்கிழமை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதில் அந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பதக், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் குறைந்த விலையில் குடிநீர் விநியோகம் செய்வதில் வெற்றிப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். உலகின் எந்த மூலையிலும் இதுபோன்ற திட்டம் அறிமுகமாகவில்லை என்று கூறினார். முதல் கட்டமாகத் தர்பங்காவை தேர்வு செய்துள்ளதாகத் தெரிவித்த பதக், வரும் டிசம்பர் மாதம் முதல் திட்டம் செயல்படத் தொடங்கும் என்றார்.
சுத்திகரிப்பு அளவு
சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் லிட்டர் வரை சுத்திகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் ஒரு லிட்டர் குடிநீர் 50 பைசாவுக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவித்தார். குடிநீர் திட்டம் செயல்படவுள்ள ஹரிபோலில் மரங்களை நட்டு, சுயஉதவிக்குழுக்கள் மூலம் நிர்வகிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலம் வடக்குப் பர்கானாஸ், முர்ஸிதாபாத் மற்றும் நடியா ஆகிய மாவட்டங்களில், 3 ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முறையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
செலவு
பிரஞ்சு நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்போடு தொடங்கப்பட்ட இந்தத்திட்டம் சோதனையில் வெற்றிப் பெற்றதாகப் பதக் தெரிவித்தார். இதனால் பீகார் மாநிலத்தில் இதுபோன்ற ஒரு திட்டத்தைத் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் தர்பங்காவை தேர்வு செய்ததாகக் கூறினார். இந்தத் திட்டத்தைத் தொடங்க குறைந்தது 20 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு ஆகும் என்றும் தெரிவித்தார்.
வேதிப்பொருட்கள்
நேபாள எல்லையை யொட்டிய பீகாரின் வடபகுதிகள், ஆர்செனிக் போன்ற வேதிப்பொருட்கள் பூமியில் கலந்துள்ளதால் சுத்தமான குடிநீரைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதையும், மருத்துவக் குழுக்கள் அன்றாடம் வந்து சிகிச்சை அளித்துச் செல்வதையும் கேள்விப்பட்டதாகக் கூறினார். இந்தத் திட்டத்தால் நிலைமை மாறும் என்று பதக் நம்பிக்கை தெரிவித்தார்.
திட்டம் துவங்கும் முன்பும் இப்போதும்
இந்த நிறுவனம் நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்பு சுத்தமான குடிநீருக்குத் திண்டாடிய மக்கள் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்கள். திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.கொல்கொத்தாவிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள 24 பர்கானாஸ் மாவட்டத்தில் மத்துசுதன் காந்திகிராமம் என்ற இடத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் குளம் போன்ற வடிவத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைச் சுலப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
உலகச் சுகாதார அமைப்பு
இந்தியாவின் பல பகுதிகளில் பூமியின் மேற்பரப்பு ஆர்செனிக் ரசாயனப் பொருட்களால் மாசுபட்டுள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் காற்று, நீர், நிலம் இயல்பான தன்மையை இழந்து நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது. குடிக்கும் தண்ணீரும், உணவுப் பொருட்களும் விஷமேறிக் கொண்டிருக்கிறது. இதன் முடிவு புற்றுநோய் ஏற்படுகிறது. மக்களின் நலன் கருதி சுலப் நிறுவனம் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.