வங்கி அதிகாரிகள் கடன் அளித்தது மட்டும் இல்லாமல் அவற்றுக்கான கால அளவை நீட்டித்துக்கொண்டே சென்று அவை இன்று வாரா கடனாக வளர்ந்துள்ளது எனப் பல வங்கிகளின் முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை வலையில் உள்ளனர்.
கடந்த 4 மாதங்களில் மட்டும் அமலாக்கத் துறை 50-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகளைக் கைது செய்துள்ளது. வங்கி பொது மேலாளர்கள் மற்றும் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் தான் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகளவில் தொடர்புடையவர்களாக உள்ளதாகவும் சிபிஐ கூறுகின்றது.
வங்கி தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள்
வங்கிகளில் கடன் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்களில் 9 நபர்களது வங்கியின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் ஆவார். அது மட்டும் இல்லாமல் இந்தப் பட்டியலில் முன்னாள் ஆர்பிஐ ஊழியர்களுக்கும் தொடர்புடையதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பொதுத் துறை வங்கி
2014-2015 மற்றும் 2016-2017 நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கிகளில் மட்டும் 8,622 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 1,146 வழக்குகளில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுகிறது.
தனியார் வங்கி
அதே காலக் கட்டத்தில் தனியார் வங்கிகளில் 4,156 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 568 வழக்குகள் வங்கி ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நீரவ் மோடி செய்த மோசடிகள் வெளிவந்த பிறகு மட்டும் வங்கி ஊழியர்களை அமலாக்கத் துறை கைது செய்வது என்பது 5 மடங்கு அதிகரித்துள்ளது. நீரவ் மோடி வழக்கில் பிஎன்பி வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனருக்கும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ
தற்போது சிபிஐ 44 பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் 292 வழக்குகளைப் பதிவு செய்து மோசடிகள் குறித்து விசாரித்து வருகிறது. அதில் 10 வழக்குகள் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த வழக்குகள் ஆகும்.