இறக்குமதி செய்யப்படும் 50 துணி, நூல் பொருட்களுக்கான வரியை இரட்டிப்பாக்கியுள்ளதால், உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகளால் இந்திய ஜவுளித்துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் 50 ஜவுளிப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை இரட்டிப்பாக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
எந்த ஆடைகளின் விலை எல்லாம் உயரும்?
இது தொடர்பாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் கோட், பேண்ட், ஜாக்கெட் மற்றும் மகளிர் ஆடைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 10 விழுக்காடு வரி, 20 விழுக்காடாக உயர்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது. சணல்,காகித நூல், கம்பளங்கள், லேமினேட் பைபர் மற்றும் இழைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட தாள்களுக்கும் இதே வரி விகிதம் பொருந்தும் எனக் கூறியுள்ளது.சதுர மீட்டர் நீளமுள்ள ஜவுளிப் பொருட்களுக்கு 38 ரூபாய் அல்லது 20 விழுக்காடு வரி விதிப்பது உள்ளிட்ட 45 மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டதாக மறைமுக வாரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
எப்போது முதல் நடைமுறைக்கு வருகிறது?
ஜூலை 16 ஆம் தேதியிலிருந்து புதிய அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை மறைமுக வரிகளில் உடனடியான மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை.இது இயல்பான விலை விகிதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறும் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் அஜய் சகாய், வங்கதேசம் போன்ற வளர்ந்து வரும் நாடுகளை இது பாதித்து விடக்கூடாது என்று கூறியுள்ளார்.
மேக் இன் இந்தியா
உலக வர்த்தக அமைப்பின் கூற்றுப்படி, ஜவுளிப் பொருள் இறக்குமதி வரியை உயர்த்துவதன் மூலம், உள்நாட்டுத் துணிநூற்புத்துறை ஊக்குவிக்கப்படும் என்று கூறும் வர்த்தக வல்லுர்கள், மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய அம்சமாக இது இருக்கும் என்று கருதுகிறார்கள். சுங்கவரி அதிகரிப்பு இந்திய இந்தியா ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும் என்றும், இந்த முடிவால் வெளிநாட்டு ஆலைகள் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
சீனா, கம்போடியா, வியட்நாம் மற்றும் வங்கதேசத்திலிருந்து ஜவுளி உற்பத்தி பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், நடுவண் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை அளித்துள்ளது. இதனால் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு உற்சாகம் அடைந்துள்ளதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி வரியை இரட்டிப்பாக அதிகரித்தது உள்நாட்டு ஜவுளித்துறைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.