மத்திய நிதி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கார்ப்ரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் மேலும் சில பொதுத் துறை வங்கிகளுக்கு 11,336 கோடி ரூபாயினை மறு மூலதனம் அளிக்க அனுமதி அளித்துள்ளது.
2018-2018 நிதி ஆண்டில் முதற்கட்டமாக இந்த மூலதனமும் அளிப்பது மட்டும் இல்லாமல் இந்த வருட இறுதிக்குள் 53,664 கோடி ரூபாய் மறு மூலதனம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு சென்ற வருடம் வங்கிகளுக்கு அளிப்பதாக அறிவித்த 2.11 லட்சம் கோடி மறு மூலதனத்தில் இந்த 11,336 கோடி ரூபாயும் அடங்கும்.
மறு மூலதனம்
பொதுத் துறை வங்கிகளுக்குச் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட 2.11 லட்சம் கோடி மறு மூலதனத்தில் 1.35 லட்சம் கோடி ரூபாய் மறு மூலதனமாகவும், மீத 58,000 கோடி ரூபாய் சந்த மூலதனமாகவும், பத்திரங்களாகவும் அளிக்கப்படும் என்று இது குறித்து விவரம் அறிந்த அதிகாரிகள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி உள்ளிட்டவர்களுக்குக் கடன் அளித்து 13,000 கோடி வரை ஏமார்ந்து நிற்கும் நிலையில் மத்திய அரசு 2,555 கோடி ரூபாய் மறு மூலதனத்தினைப் பெற இருக்கிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
மூலதனம் பெறும் வங்கிகள் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2,157 கோடி ரூபாயினைப் பெற இருக்கிறது.
ஆந்திரா வங்கி
மூலதனம் பேறும் பட்டியலில் 3-ம் இடத்தில் 2,019 கோடி ரூபாயுடன் ஆந்திரா வங்கி உள்ளது.
அலகாபாத் வங்கி
அல்காபாத் வங்கி 1,790 கோடி ரூபாயுடன் மூலதனம் பெறும் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குக் கூறியுள்ள சில வங்கிகளுக்கு வட்டி உயர்வு போன்ற அழுத்தங்களால் உடனடியாக மூலதனம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
வாரா கடன்
10 லட்சம் கோடி ரூபாய் வாரா கடனால் பொதுத் துறை வங்கிகளுக்கு மறு மூலதனம் என்பது அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 21 பொதுத் துறை நிறுவனங்களில் 13 வங்கிகளுக்குப் பங்கு சந்தை மூலம் நிதி திரட்டும் பணிகள் ஏற்கனவே துவங்கியுள்ளது.
பங்குகளின் நிலை
காலை 11:20 மணி நிலவரப்படி பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்கு மூலதனம் அறிவிக்கப்பட்ட போதிலும் 2.80 புள்ளிகள் என 3.56 சதவீதம் சரிந்து 75.90 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்குகள் 0.86 புள்ளிகள் உயர்ந்து 14.34 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ஆந்திரா வங்கி பங்குகள் 0.55 புள்ளிகள் என 1.77 சதவீதம் சரிந்து 30.45 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அலகாபாத் வங்கி பங்குகள் 1.75 புள்ளிகள் எனச் சரிந்து 4.02 சதவீதம் சரிந்து 40.55 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.