வங்கி கணக்கில் வாடிக்கையாளர்கள் பணத்தினை டெபாசிட் செய்து இருக்கும் போது வங்கி திவால் ஆனால் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணத்தினைத் திரும்ப அளிக்கக் கூடிய சட்டம் இருந்து வரும் நிலையில் அதனை மாற்றி வங்கிகள் திவால் ஆனால் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தினைப் பிடித்து வைத்துக்கொண்டு அதனை மூலதனமாகப் பயன்படுத்தி வங்கியைக் காப்பாற்றும் திட்டமாக எப்ஆர்டிஐ எனப்படும் நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகை மசோதாவானது 2017-ம் ஆண்டு மோடி அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவானது அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு வகையில் விமர்சிக்கப்பட்டும் வந்தது.
பின்னர் இந்த எப்ஆர்டிஐ மசோதாவினை நிறைவேற்றுவதைக் காலவரையின்றி மத்திய அரசு ஒத்தி வைத்து இருந்த நிலையில் தற்போது திரும்பப் பெற இருப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
போராட்டம்
வங்கி ஊழியர் சங்கங்கள் மற்றும் பொதுத் துறை காப்பீட்டு நிறுவன ஊழியர் சங்கங்கள் ஜூலை 14-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த மசோதாவை திரும்பப் பெறுவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
மக்கள் பீதி
வங்கிகள் வாரா கடனால் சிக்கி தவித்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் திவால் ஆகலாம் என்ற அச்சத்தில் எப்ஆர்டிஐ மசோதா வந்தால் வங்கி கணக்கில் உள்ள தங்களது பணத்தினை எல்லாம் எடுக்க முடியாமல் போகும் என்று மக்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ள பணத்தினை எல்லாம் வெளியில் எடுக்கத் துவங்கியுள்ளனர்.
மத்திய அமைச்சகம்
இந்நிலையில் பொருளாதார விவகார துறை அதிகாரிகள் இந்த மசோதாவை திரும்பப் பெற முடிவு எடுத்து இருந்தாலும் மத்திய அமைச்சகம் ஏற்கனவே இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதால் அவர்களின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. அவர்கள் அனுமதி அளித்த பிறகு இந்த எப்ஆர்டிஐ மசோதா வாப்பஸ் வாங்கப்படும்.
பொதுத் துறை வங்கிகள்
2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீட்டு மசோதாவின் திவால் விதிகள் பொதுத் துறை வங்கிகளுக்குப் பொருந்தாது, தனியார் துறை வங்கிகளைத் திவால் ஆவதில் இருந்து காப்பாற்றவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
திவாலானால் என்ன ஆகும்?
எப்ஆர்டிஐ சட்டம் அமலுக்கு வந்து வங்கிகள் திவால் ஆகும் போது வாடிக்கையாளர்கள் பணத்தினைத் திருப்பி அளிக்க முன்னுரிமை வழங்கப்படும், இதுவே வேறு வங்கிகளுடன் இணைவது அல்லது விற்கும் போது பணத்தினை அளிப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
மோடி
பிரதமர் மோடி அவர்களும் குஜராத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் எப்ஆர்டிஐ மசோதாவானது வங்கிகளைத் திவால் ஆவதில் இருந்து காப்பாற்றுவது மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் பணத்திற்கும் காப்பீடு அளிக்கும். நான் உங்களுக்கு எதிரான முடிவினை எடுப்பேனா என்று நினைத்துப் பாருங்கள் என்றும் கூறினார்.
விளக்கம்
தற்போது உள்ள வங்கி டெபாசிட் விதிகளின் கீழ் வாடிக்கையாளர்கள் எவ்வளவு டெபாசிட் செய்து இருந்தாலும் திவால் ஆனால் 1 லட்சம் மட்டுமே கிடைக்கும். ஆனால் எப்ஆர்டிஐ மூலம் தாமதமானாலும் முழுப் பணத்தினையும் திரும்பப் பெறலாம். வங்கி சார்ந்த நிதி நிறுவனங்கள் என்றில்லாமல் அனைத்து நிதி நிறுவனங்களுக்கு ஏற்றவாறு விதிகள் கட்டமைக்கப்பட்டு வருகிறது என்று பல்வேறு வகையில் மத்திய அரசு கூறிய போது மக்களுக்கு அதன் மீது நம்பிக்கையில்லாமல் போனது.
வாடிக்கையாளர்கள்
தாங்கள் டெபாசிட் செய்த வைத்துள்ள பணத்தினை எங்களது தேவைக்கு இல்லாத போது எதற்கு என்று அச்சம் எழ பீதி அடைந்த பலர் வங்கிகளில் தாங்கல் டெபாசிட் செய்து வைத்து இருந்த பணத்தினைத் திரும்ப எடுக்கத் துவங்கியதை அடுத்து மத்திய அரசு எப்ஆர்டிஐ மசோதாவை நிறைவேற்றுவதை ஒத்தி வைத்திருந்த நிலையில் தற்போது முழுமையாகத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.