மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் விவசாயிகளின் பெயரில் ஐயாயிரத்து 400 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. விவசாயிகள் செய்ய முடியாததை பெரும் பணக்காரர்கள் செய்ய முடியும் என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
யார் அவர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்னாகர் குட்டே. கங்காகெட் சுகர் மற்றும் எரிசக்தி நிறுவனம் என்ற பெயரில் சர்க்கரை ஆலையை நடத்தி வருகிறார்
விவசாயிகள் பெயரில் மோசடி
அறுவடை மற்றும் போக்குவரத்து திட்டங்களின் மூலம்,2015 ஆம் ஆண்டு 600 விவசாயிகளின் பெயரில் கடன் பெற்றுள்ளார். ஒரு விவசாயியின் பெயரில் 25 லட்ச ரூபாய் வீதம் ஐயாயிரத்து 400 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். குறிப்பிட்ட விவசாயிகளுக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக வங்கியில் விசாரித்தபோது 25 லட்சம் ரூபாய் தங்கள் பெயரில் கடன் பெற்றிருப்பது தெரிய வந்தது.
போலி நிறுவனங்களில் முதலீடு
விவசாயிகள் பெயரில் வாங்கிய கடனை என்ன செய்வது என்று தொழிலதிபருக்குத் தெரியாதா என்ன. எல்லா பணக்கார முதலைகளைப் போல போலி நிறுவனங்களைத் தொடங்கி அதில் முதலீடு செய்ததாக கணக்கு காண்பித்துள்ளார். 20 க்கும் மேற்பட்ட அந்த போலி நிறுவனங்களுக்கு சொத்தும் கிடையாது, முகவரியும் கிடையாது என்பது பின்னர்தான் தெரிய வந்தது.
குட்டே மீது வழக்குப்பதிவு
மோசடியில் ஈடுபட்டதாக ரத்னாகர் குட்டே மீது காவல்துறையினர் கடந்த 5 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கைது நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது
தலைவர்கள் வலியுறுத்தல்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் தலைவருமான தனஞ்செய் முண்டே இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளார். மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அங்கே பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.