பேருந்துக்கட்டணங்கள் விமானக்கட்டணங்களுக்கு நிகராக உயர்ந்து விட்டதால், ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி அவ்வப்போது மாற்றி அமைக்கும் பல சலுகைகள் இவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
குளிர்பதனப் பெட்டிகளில் பயணம் செய்வோர் சில நேரங்களில் ஏ.சி. இயங்காததால் மனஉளைச்சலுக்கு ஆளாவதுண்டு. இனி இப்படியெல்லாம் நீங்கள் சங்கோஜப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்வோர் ஏ.சி. இயங்காவிட்டால், கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி சில வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதற்குச் சில நிபந்தனைகளும் விதித்துள்ளது. சலுகை இருக்கும்போது கட்டுப்பாடுகளும் இருக்கத்தானே செய்யும்.
முதல் வகுப்பு எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும்?
முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் டிக்கெட் பதிவு செய்த பயணிக்கு, முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிக்கும், முதல் வகுப்புச் சாதாரணப் பெட்டிக்கும் இடையேயான தொகை, திருப்பிச் செலுத்தப்படும்.
முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு
முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருந்தால், முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி கட்டணத்துக்கும், மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி கட்டணத்துக்கும் இடையே வித்தியாசப்படும் தொகை திருப்பி வழங்கப்படும். அல்லது படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கான கட்டணம் பயணிகளுக்குத் திரும்பச் செலுத்தப்படும். இது மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் பொருந்தும்.
சேர் கார்
ஏர் கண்டிசன் சேர் காருக்கான டிக்கெட் வைத்திருந்தால், ஏர் கண்டிசன் சேர் காருக்கும், இரண்டாம் வகுப்புக்கான கட்டணத்துக்கும் இடையேயான தொகையைப் பயணிகள் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.
எக்ஸியூட்டிவ் கிளா
எக்ஸியூட்டிவ் கிளாசில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்கும் பயணி, நிர்வாகப் பிரிவினருக்கும், சிறப்புப் பிரிவினருக்கும் வசூலிக்கும் கட்டணத்துக்கு இடையேயான வித்தியாசத்தொகை திரும்ப வழங்கப்படும். அல்லது முதல் வகுப்புப் பெட்டிக்கான பணத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.
ஈ டிக்கெட்
ஈ டிக்கெட் வைத்திருக்கும் பயணி, டி.டி.ஆரிடம் ஆன்லைன் மூலம் முறையீடு செய்ய வேண்டும். ரயில் பயணத் தூரத்தை அடைவதற்கு 20 மணி நேர கால அளவில் ஒரிஜினல் சர்டிபிகேட்டுடன் (GC/EFT)டிக்கெட் பரிசோதகரிடம் முறையிடலாம். ஐ.ஆர்.சி.டி.சி, ஜெனரல் மேனேஜர், இண்டெர்நெட் டிக்கெட் சென்டர் மற்றும் டெல்லி ஐ.ஆர்.சி.ஏ அலுவலகத்துக்கு அனுப்பிப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கலாம்.
புகார்
ஈ டிக்கெட்டில் பயணிக்கும் பயணி, பயண நேரத்தின்போது டிக்கெட் பரிசோதகரிடம் ஒரிஜினல் சர்ட்டிபிகேட் மற்றும் முகவரியுடன் பிரச்சினையைச் சொல்லி நிவாரணம் பெறலாம்.
எப்போது பணம் திரும்பக் கிடைக்கும்?
ஒரிஜினல் சர்டிபிகேட் கிடைக்கப்பெற்றவுடன், ரயில்வே நிர்வாகம் டி.டி.ஆர் மூலமே கட்டணத்தைத் திரும்பச் செலுத்த நடவடிக்கை எடுக்கும். பயணிகள் கட்டணம் செலுத்திய கணக்கிலேயே, ரயில்வே நிர்வாகத்தால் திரும்பச் செலுத்தப்படும் தொகை கிரீடிட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.