ஜியோ பல்கலைக்கழகத்துக்காக மாணவர்களின் கல்விக்கட்டணத்தில் நூறு கோடி ரூபாய் திரட்ட ரிலையன்ஸ் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை அருகே கர்ஜாட் என்ற இடத்தில் 800 ஏக்கர் நில பரப்பளவில் இந்தப் பல்கலைக்கழகம் அமையவுள்ளது.
ஜியோ ஒரு சர்ச்சை
உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பெறப் போட்டியிடுவதற்காக, 3 அரசு பல்கலைக்கழகங்களையும், 3 தனியார் பல்கலைக்கழகங்களையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்ட பல்கலைக் கழகங்களுக்குத் தன்னாட்சி உரிமையும், 5 ஆண்டுகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இணையதளத்தில் தேடியபோது ஜியோ பல்கலைக்கழகம் தொடங்கப்படாததும், அதற்கு முகவரியே இல்லை என்பதும் தெரிய வந்தது. இது நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜியோ பல்கலையின் அமைவிடம்
ஜியோ பல்கலைக்கழகம் மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை அருகே கர்ஜட் என்ற இடத்தில் அமையவுள்ளது. 800 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனம் 9500 கோடி ரூபாயை செலவிட உள்ளது.
ஒரு பல்கலை- பல படிப்புகள்
ஜியோ பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளைத் தொடங்க ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. மானுடவியலுக்கு 200 இடங்களும், ஊடகத்துறைக்கு 60 இடங்களும் ஒதுக்க முடிவு செய்துள்ளது. இயற்கை அறிவியல் படிப்புக்கு 300 இடங்களும், பொறியியல் மற்றும் கணினி அறிவியலுக்கு 250 இடங்களும் ஒதுக்கீடும் செய்ய முன்வரைவுகளைத் தயார் செய்யப்பட்டுள்ளன. கலை அறிவியல், நகர்ப்புற திட்டமிடல், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை, சட்டம், விளையாட்டு அறிவியல் துறைகளைத் தொடங்கவும் ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது.
மாணவர்களிடம் கையேந்த முடிவு
ஜியோ பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்குப் பலே திட்டங்களை ரிலையன்ஸ் முன் வைத்துள்ளது. முதலாம் ஆண்டில் ஆயிரம் மாணவர்களிடம் நூறு கோடி ரூபாய்த் திரட்டப்படும் என்று, நடுவண் அரசுக்கு அளித்துள்ள விண்ணப்பத்தில் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஆண்டில் இந்த எண்ணிக்கை இருமடங்காக இருக்கும் என்று கூறியுள்ள ரிலையன்ஸ அறக்கட்டளை, கல்வி மற்றும் விடுதிக் கட்டணமாக 2 ஆயிரம் மாணவர்களிடம் இருந்து 208 கோடி ரூபாய் திட்ட முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது. படிப்பில் தகுதியுள்ள மாணவர்களுக்கு 38 கோடி ரூபாய் ஸ்காலர்ஷிப்பாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இரண்டாவது ஆண்டில் இந்தத் தொகை 76 கோடியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
பேராசிரியர்களுக்குச் சம்பளம்
உலகளவில் சிறந்து விளங்கும் பேராசிரியர்களை, ஜியோ பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிகிறது. பல்கலைக்கழகத்தின் செலவினங்களுக்காக 154 கோடி ரூபாயை ஒதுக்கத் திட்டமிட்டுள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை, 93 கோடி ரூபாயைச் சம்பளமாக வழங்க முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் இன் எதிர்பார்ப்பு
அடுத்த 15 ஆண்டுகளில் 10 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்கவும், அவர்களின் கட்டணம் மூலம் ஜியோ பல்கலைக்கழகத்தின் நிகர வருவாயை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதில் ஆயிரத்து 500 கோடியை கட்டணத் தள்ளுபடியாகக் கிள்ளிக் கொடுக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது.