புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நூறு ரூபாய் தாள்களை ஏ.டி.எம் மூலம் விநியோகம் செய்வதில் பல்வேறு சவால்களும், சிக்கல்களும் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 2.4 லட்சம் ஏ.டி.எம் இயந்திரங்களை மறுசீரமைப்பு செய்யவும், புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தவும் நூறு கோடி ரூபாய்ச் செலவாகும் என ஏ.டி.எம்-ஐ கையாளும் பராமரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ரூ.200 தாளும் சிக்கலும்
பணமதிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, புதிய 200 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனை ஏ.டிஎம்-ல் விநியோகிப்பதில் பல்வேறு சிக்கல் எழுந்தது. அப்போது ஏ.டி.எம் எந்திரங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டிய சூழல் உருவானது. இதனால் ஏ.டி.எம் எந்திரங்களைக் கையாளுபவர்கள் பல இம்சைகளை அனுபவித்தனர்.
புதிய ரூ.100 அறிமுகம்
கடந்த சில தினங்களுக்கு முன்னர்ப் புதிய நூறு ரூபாய் தாள்கள் புழக்கத்துக்கு வரும் என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்தது. அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நூறு ரூபாயில் ஊதா நிறத்தில் உள்ளது. அதில் குஜராத்தில் உள்ள ராணி கி வாவ் என்ற புகழ் பெற்ற கிணறு இடம் பெற்றுள்ளது. அளவில் சிறிய அந்த ரூபாய் தாள் விரைவில் நடைமுறைக்கு வருகிறது.
மறு சீரமைக்க ரூ.100 கோடி
புதிதாகப் புழக்கத்துக்கு வரவுள்ள நூறு ரூபாய் தாள்களை விநியோகிக்க மீண்டும் ஏ.டி.எம் எந்திரங்களை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாகக் கூறியு பலசுப்பிரமணியம் என்பவர், நாடு முழுவதும் 2.4 லட்சம் ஏ.டி.எம்களில் புதிய தொழில்நுட்பம் தேவையாக உள்ளதாகக் கூறினார். புதிய நூறு ரூபாய் தாள்களுடன் பழைய நூறு ரூபாய் தாள்களும் புழக்கத்தில் இருக்கும் என்பதால் சிக்கல் மேலும் அதிகமாகியுள்ளது. இது போன்ற சூழல்கள் உருவாகும்போது ஏ.டி.எம் எந்திரங்களை மாற்றி அமைக்கலாமா வேண்டாமா என்று தோன்றுவதாகக் கூறினார்.
சமச்சீரற்ற நிலை
புதிய ரூபாய் தாள்களை விநியோகிப்பதிலும், பழைய ரூபாய் தாள்களைத் திரும்பப் பெறுவதிலும் சமச்சீரற்ற நிலை இருப்பதாக எப்.ஐ.எஸ் இன் நிர்வாக இயக்குநர் ராதா ராமதுரை கூறியுள்ளார். பழைய ரூபாய் தாள்களை விநியோகிப்பதிலும், புதிய ரூபாய் தாள்களை நிரப்புவதிலும் இடைவெளி உள்ளதாகக் கூறிய அவர், ஏ.டி.எம்களை இயக்கத்தை இது பாதிக்கும் என்று கூறினார்
தேவை நீண்டகாலம்
நூறு ரூபாய் தாள்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், 12 மாத இடைவெளியில் 2.4 லட்சம் ஏ.டி.எம்களை மறுசீரமைக்கக் கட்டாயத்தில் இருப்பதாகவும், இதற்கு நூறு கோடி ரூபாய்ச் செலவாகும் என்றும ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீசின் ஆண்டனி தெரிவித்துள்ளார். 200 ரூபாய் தாள்களை விநியோகிப்பதற்காக நடைபெற்ற ஏ.டி.எம் சீரமைப்புப் பணிகளே இன்னும் முழுமையாக மநிலையில், புதிய நூறு ரூபாய் தாள்களுக்குத் தொடங்கும் தொழில்நுட்ப மறு சீரமைப்புக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று கூறினார்.
200 ரூபாய் தாள்களுக்காக ஏ.டி.எம் சீர்திருத்தம் முடிவடைந்த நிலையில், மீண்டும் மறுசீரமைப்புக்கு முதலீடுகளும், முயற்சிகளும் தேவையாக இருக்கும் என்று கூறினார்.
விநியோகிக்க முடியாது
புதிய ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்வது ஒரு பெருமையான தருணம் என்றாலும் கூட, அதன் பரிமாணங்களில் உள்ள வேறுபாடுகளால் ஏ.டி.எம் மூலம் பரவலாக விநியோகிப்பது இயலாது என், ஏரோனெட் சர்வீசின் நிர்வாக இயக்குநர் ஹிமான்சு புஜரா கூறியுள்ளார். இதனால் கால விரயமும், செலவும் அதிகம் ஏற்படுவதால் ஏ.டி.எம் செயல்பாட்டில் பெரிய பின்னடைவு ஏற்படும் என்றார்.