மும்பை: மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோகோ-கோலா, பெப்சி மற்றும் பிஸ்லரி நிறுவனங்கள் தங்களது குளிர் பாணம் மற்றும் தண்ணீர் பெட் பாட்டில்களைத் திருப்பி அளித்தால் பணம் அளிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுள்ளன.
இதற்காக இந்த நிறுவனங்கள் ஒரு பாட்டிலுக்கு எவ்வளவு பணம் திருப்பி அளிக்கப்படும் என்பதையும் சேர்த்து அச்சிட உள்ளன.
மகாராஷ்டிரா
எனவே மகாராஷ்டிராவில் விரைவில் மக்கள் தாங்கள் பயன்படுத்திய நீர் மற்றும் குளிர்பான பாட்டில்களைத் திருப்பி அளித்துவிட்டு அதற்கான சொற்ப தொகையினையும் திரும்பப் பெறலாம்.
எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும்?
மகாராஷ்டிரா அரசு பெட் பாட்டில்களைத் திரும்பப் பெறும் போது எவ்வளவு கட்டணம் திருப்பி அளிக்கப் படும் என்பதை நிறுவனங்கள் வசமே விட்டுள்ளது. எனவே ஒரு கிலோ பெட் பாட்டில்களுக்கு 15 ரூபாயும், ரேப்பர்கள் ஒரு கிலோவிற்கு 5 ரூபாயும் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளன.
தடை
மகாராஷ்டிரா அரசு ஜூன் முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ள நிலையில் 200 மில்லி லிட்டருக்கும் குறைவான எடை கொண்ட பெட் பாட்டிகளை உற்பத்தி செய்ய, விற்பனை செய்யவும் தடை போட்டுள்ளது. அதற்கு அதிகமான எடை கொண்ட பிளாஸ்டிக் பாட்டிகளுக்கு இந்தப் பணம் அளிக்கும் முறையினை அறிமுகம் செய்துள்ளனர்.
தமிழ் நாடு
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழ் நாடு, குஜராத், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கும் அதே போன்று பிளாஸ்டிக் பாட்டிகளுக்குப் பணம் திருப்பி வழங்கப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.