மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் பெண் குழந்தைகளுக்காகச் சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டத்தினைச் செயற்படுத்தி வருகிறது.
செல்வ மகள் திட்டத்தில் முன்பு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்று இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு அதனை 250 ரூபாயாக மத்திய குறைத்துள்ளது.
விதிகளில் திருத்தம்
சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கு விதிகள் 2016-ன் கீழ் திருத்தம் கொண்டு வந்துள்ள மத்திய அரசு குறைந்தபட்ச டெபாசிட் தொகையினை 1,000 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் ஜேட்லி
2018-2019 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்த போது சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் 2015 ஜனவரி மாதம் அறிமுகம் செய்ததில் இருந்து மிகப் பேரிய வெற்றியினைப் பெற்று இருப்பதாக அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
முதலீடு
2017 நவம்பர் மாதம் வரை சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் 1.26 கோடி கணக்குகள் திறக்கப்பட்டுப் பெண் குழந்தைகளின் பெயரில் 19,183 கோடி ருபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதம்
பிபிஎப் மற்றும் பிற சிறு சேமிப்புத் திட்டங்கள் போன்று சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டங்களின் வட்டி விகிதமும் ஒவ்வொரு காலாண்டும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது 2018 ஜூன் - செப்டம்பர் காலாண்டிற்கு 8.1 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது.
வயது வரம்பு
பெண் குழந்தைகளுக்கு 10 வயது நிரம்புவதற்குள் அவர்களது பெயர்களில் இந்தச் செல்வ மகள் திட்டம் என்று அழைக்கப்படும் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கினை திறக்க முடியும். பொதுத் துறை வங்கிகள், தபால் அலுவலகம் மற்றும் குறிப்பிட்ட சில தனியார் வங்கிகளில் மட்டும் செல்வ மகள் திட்டத்தினைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரி
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு மற்றும் பெறக்கூடிய முதிர்வு தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80 சி கீழ் முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்ய முடியும்?
ஒரு வருடத்திற்குக் குறைந்தபட்ச முதலீடு 250 ரூபாய் எனக் குறைக்கப்பட்ட நிலையில் அதிகபட்சம் ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு இவ்வளவு டெபாசிட்களில் பணம் செலுத்த வேண்டும் என்ற வரம்புகள் கிடையாது.
டெபாசிட் காலம்
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடுகள் 14 ஆண்டுகள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். அதன் பிறகு வட்டி வருவாய் மட்டுமே கிடைக்கும்.
எப்போது வரை கணக்கு தொடர்ந்து செயல்பாடும்?
14 ஆண்டுகள் வரையில் மட்டுமே தொடர்ந்து டெபாசிட் செய்யப்படும் என்ற நிலையில் அதன் பிறகு பெண் குழந்தைக்கு 21 வயது ஆகும் வரை வட்டி வருவாய் கிடைக்கும். பிறகு கணக்கு செயல் இழந்து போகும்.