வோடபோன் நிறுவனமும், ஐடியா நிறுவனமும் ஒரே நிறுவனமாக இணைய முடிவு செய்துள்ளன. திங்கட்கிழமை அன்று அரசு தொலைத் தொடர்புத்துறைக்கு நிலுவையில் உள்ள கட்டணங்களைச் செலுத்தவுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளன..
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோனும், மூன்றாவது தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியாவும் தனித்தனியாகச் சந்தாதார்களை இணைத்துச் செயல்பட்டு வந்தன. தொலைத் தொடர்புத்துறை ஏற்பட்டுள்ள போட்டியைச் சமாளிக்க இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைய முடிவு செய்துள்ளன.
கோரிக்கை நிராகரிப்பு
நிர்வாக அலைக்கற்றைத் தொடர்பான நிலுவைத் தொகைகள் தொலைத் தொடர்புதுறையிடம் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் கட்டணத்தை மனுபரிசீலனை செய்யுமாறு இரண்டு நிறுவனங்களும் விடுத்த கோரிக்கையைத் தொலைத் தொடர்புத்துறை நிராகரித்து விட்டதாகத் தமிழ் குட் ரிட்டன்ஸ் தளத்துக்கு வந்த தகவல்கள் கூறுகின்றன.
தொலைத் தொடர்புத்துறை நிபந்தனை
இந்த மாதத்துக்குள் இணைப்பு நடவடிக்கையை முடிக்குமாறு நிபந்தனை விதித்துள்ள தொலைத்தொடர்புத்துறை, 7248 கோடி ரூபாயை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. வங்கி உத்தரவாதம் மற்றும் முதல்கட்ட அலைக்கற்றைப் பயன்பாட்டுக் கட்டணமாக 3322 கோடி ரூபாயை ஐடியா நிறுவனம் தரவேண்டும். இதேபோல் பேரமில்லாத ரேடியோ அலைவரிசைக் கட்டணமாக 3926 கோடி ரூபாயை வோடபோன் நிறுவனம் வழங்க வேண்டும்.
சந்தாதார்கள் எண்ணிக்கை உயர்வு
வோடபோன், ஐடியா நிறுவனங்கள் ஒன்றாக இணையும் பட்சத்தில் அதனுடைய மொத்த சந்தாதார்களின் எண்ணிக்கை 436 மில்லியனாக உயரும். இது ஏர்டெல் சந்தாதார்களின் எண்ணிக்கையை விட 100 மில்லியன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெயர் மாற்றம்
இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு வோடாபோன் ஐடியா என்று பெயரினை மாற்றவும் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.