தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கம்பெனி விவகாரத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில், ஒரே அறையில் 114 நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலி நிறுவனங்களில் 50 நிறுவனங்கள் எந்த வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஒரு அறை - 114 நிறுவனங்கள்
நாடு ழுவதும் போலி நிறுவனங்களை வேட்டையாடும் பணியை நடுவண் அரசு முடுக்கி விட்டுள்ளது. ஏற்கனவே சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பண உதவிகளைப் பெற்ற நிறுவனங்களின் பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டன. இந் நிலையில் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பர்ச்சூன் மொனார்ச் என்ற வணிக வளாகத்துக்குள் நுழைந்த கம்பெனி விவகாரத்துறை அதிகாரிகள், ஒரே அறையில் இயங்கி வந்த 114 போலி நிறுவனங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
போலிக் கணக்குகள்
இந்தப் போலி நிறுவனங்கள் விவசாய நிலம் உட்பட அசையா சொத்துக்கள் இருப்பதாகக் கூறி வங்கிகளில் கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்கள், 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கணக்கு காட்டியுள்ளன.
வணிக நடவடிக்கை இல்லை
கம்பெனி பதிவுச் சட்டத்துக்கு எதிராக ஒருவர் 30 நிறுவனங்களுக்கு இயக்குநராக இருப்பது தெரியவ்ந்துள்ளது. இதில் 50 போலி நிறுவனங்களில் எந்த வணிக நடவடிக்கையும் ஈடுபடவில்லை என்பதும் கைப்பற்றபட்ட ஆவணங்களின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
விசாரணை
இந்தப் போலி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கிய எஸ்.ஆர்.எஸ்.ஆர் என்ற நிறுவனத்தில் இணையத் தளத்தில் இந்த நிறுவனங்கள் 4 கோடியே 75 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளது.இது தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவும் போலியா?
நாடு முழுவதும் பட்டியலிடப்பட்ட ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆண்டுக் கணக்கை தாக்க செய்யவில்லை எனக் கம்பெனி விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.