இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதித்து வரும் நிலையில், தமிழக அரசு பிளாஸ்டிக் பூசப்பட்ட பேப்பர் கப்புகளைப் பயன்படுத்த தடை விதிக்க உள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவால் தமிழ்நாட்டில் உள்ள பேப்பர் உற்பத்தி நிறுவனங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள 20 கோட்டிங் அமைப்புகள், 500 கப் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட உள்ளது.
வேலை வாய்ப்பு இழப்பு
இந்நிறுவனங்கள் மூடப்படும் காரணத்தால் தமிழ்நாட்டில் இத்துறையில் பணியாற்றும் சுமார் 15,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். சிறு நிறுவனங்களைத் தாண்டி தமிழ்நாடு நியூஸ்பிரின்ட் நிறுவனமும் இந்த முடிவின் மூலம் பாதிக்கப்படும்.
பாதிக்கப்படும் நிறுவனங்கள்
இதேபோல் வெஸ்ட் கோஸ்ட் பேப்பர், சென்சூரி பேப்பர், ஐடிசி மற்றும் ஜேகே பேப்பர் ஆகிய நிறுவனங்களும் பாதிக்கப்பட உள்ளது. தமிழக அரசு இந்தத் தடையை ஜனவரி 2019 முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் சென்ற மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெப்சி, கோக், பிஸ்லரி நிறுவன பெட் பாட்டிகளைத் திருப்பி அளித்தால் பணம் கொடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் நாடு அரசு
தமிழ் நாடு அரசும் 2019 ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்த நிலையில் அதன் முதற்கட்டமாக இந்த நடவடிக்கைகளில் இறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.