இந்திய தொலைத்தொடர்பு துறை வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைவதற்கான இறுதிக் கட்ட அனுமதியை வழங்கியுள்ளது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இரண்டு நிறுவனங்களும் இணைய இருப்பதாகச் செய்திகள் வெளியானதை அடுத்து ஐடியா செல்லுலாரின் பங்குகள் 2 புள்ளிகள் உயர்ந்து 3.64 சதவீதம் உயர்ந்து 56.95 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
வோடாபோன் ஐடியா
வோடோபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைந்த பிறகு வோடாபோன் ஐடியா எனப் பெயர் மாற்றம் பெறுவது மட்டும் இல்லாமல் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் என்ற பெயரையும் பெர உள்ளது குறிப்பிடத்தக்கது.
பங்குகள் சரிவு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 2016-ம் ஆண்டுச் செப்டம்பர் முதல் வர்த்தக ரீதியான சேவையினை அளிக்கத் துவங்கியுள்ள நிலையில் ஐடியா நிறுவனப் பங்குகள் ஒவ்வொரு நாளும் சரிந்துகொண்டே வருகிறது.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் இணைவை அறிவித்தது முதல் பார்தி ஏர்டெல்லினை முந்துவது உறுதியாகியுள்ள நிலையில் 438.8 மில்லியன் சந்தாதார்களையும் பெற உள்ளது.
குமார் மங்களம் பிர்லா
மேலும் ஆதித்யா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா பொறுப்புகள் இல்லா நிர்வாகத் தலைவராகவும், வோடாபோன் இந்தியாவின் தற்போதைய மூத்த செயலாக்க அதிகாரியான பாலேஷ் ஷர்பா தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்க உள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோ
இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு ஏர்டெல் நிறுவனத்திற்குப் பாதிப்பு இருக்கிறதோ இல்லையோ, ரிலையன்ஸ் ஜியோவிற்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.