நாட்டின் முன்னணி மலிவுவிலை விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ பல்வேறு காரணங்களுக்காகவும், அரசு கட்டுப்பாடுகளுக்காகவும் கடந்த 5 மாதத்தில் சுமார் 1,824 விமானங்களை ரத்து செய்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் இந்தச் செயலால் இந்தியாவில் மட்டும் சுமார் 1,08,549 பயணிகளின் பயணம் ரத்தாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் மூலம் 1.08 லட்ச பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்றத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜயந்த் சின்ஹா எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் சுமார் 40 சதவீத வர்த்தகச் சந்தை இண்டிகோ நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இண்டிகோ நிறுவனம் பயன்படுத்தும் ஏ320 ரக விமானத்தில் Pratt & Whitney இன்ஜினில் கோளாறு ஏற்படவே இந்நிறுவனம் சுமார் 11 விமானங்களைத் தரையிறக்கியது. இதன் பின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்புக் கூடுதலாக 8 விமானங்களை இயக்கத் தடை விதித்தது.
இதன் எதிரொலியாகவே தொடர் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டது.