இன்சூரன்ஸ் பாலிசிகளை எல்ஐசி மட்டும் இல்லாமல் பல தனியார் நிறுவனங்களும் விற்று வரும் வரும் நிலையில் காப்பீட்டு நிறுவனங்களில் கோரப்படாமல் உள்ள 15 ஆயிரத்து 166 கோடி ரூபாயை சந்தாதார்களுக்கு உடனடியாகத் திருப்பி வழங்குமாறு, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கோரப்படாமல் கிடக்கும் பெருந்தொகை
2018 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டில், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உட்பட 32 காப்பீட்டு நிறுவனங்களில் 15 ஆயிரத்து 166 கோடி ரூபாய் பயனாளர்களால் கோரப்படாமல் இருப்பதாக அண்மையில் வெளியான தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 10 ஆயிரத்து,509 கோடி ரூபாயும், 22 தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் 4,657 கோடி ரூபாயும் பயனாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் பொதுமக்கள் பணம்
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்சியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 807 கோடி ரூபாய்க் கோரப்படாமல் இருக்கிறது. ரிலையன்ஸ் நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 696 கோடி ரூபாயும், எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 670 கோடி ரூபாயும் மற்றும் எச்.டி.எப் சி. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 659 கோடி ரூபாயும் பயனாளர்களால் கோரப்படாமல் இருக்கின்றன.
உடனடியாக வழங்க உத்தரவு
கோரப்படாமல் கிடக்கும் இந்தப் பெரும் தொகையின் பயனாளர்களை அடையாளம் கண்டு பிடித்து உடனடியாக அவர்களிடம் ஒப்படைக்குமாறு,
காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இணையதளத்தில் வசதி தேவை
காப்பீட்டு நிறுவனங்களில் கோரப்படாமல் கிடக்கும் தொகை குறித்து, 6 மாத கால அடிப்படையில் அந்தந்த நிறுவனங்கள் சொந்த இணையத் தளங்களில் புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சந்தாதார்கள் மற்றும் பயனாளர்கள் தெரிந்து கொள்ள வசதியாக இணையத் தளத்தில் ஒரு தேடல் வசதியை உருவாக்க வேண்டும் என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.