ஊதிய உயர்வு குறித்து இந்திய வங்கிகள் சங்கத்துடன், தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 6 சதவீத ஊதிய உயர்வை ஏற்க மறுத்ததால், 14 வது சுற்று பேச்சுவார்த்தை ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை -25 விழுக்காடு உயர்வு
பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 37 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. கடந்த மே மாதம் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனக் கோரிக்கையை முன் வைத்தனர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்திய வங்கிகள் சங்கம் 2 சதவீதம் தருவதாகக் கூறியது.
வேலை நிறுத்தம்
இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் 2 நாள் வேலை நிறுத்தத்தைக் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கினர். இதனைத் தொடர்ந்து வங்கி ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
உடன்பாடு இல்லை
அதன்படி இருதரப்புக்கும் இடையே நேற்று 13 வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பலமணி நேரம் நீடித்த மாரத்தான் பேச்சு வார்த்தையில் 6 சதவீதம் வழங்குவதாக இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்தது. இதனை அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள மறுத்ததால் உடன்பாடு எட்டவில்லை.
பிடிவாதம்- மீண்டும் பேச்சு
இரட்டை இலக்கத்தில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதில் தொழிற் சங்கங்கள் விடாப்பிடியாக உள்ளன. இதனால் மீண்டும் ஆகஸ்ட் மாதம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதாக அகில இந்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.