தொழிலாளர் துறை அமைச்சகம் விரைவில் ஊழியர்களின் பிஎப் திட்ட பங்களிப்பினை குறைக்க முடிவு செய்துள்ளதால் ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயரும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
தற்போது ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 24 சதவீதம் பிஎப் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதில் 12 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாகவும், 12 சதவீதம் நிறுவனங்களின் பங்களிப்பாகவும் உள்ளது.
எவ்வளவு பிஎப் பங்களிப்பு குறையும்?
சமுகப் பாதுகாப்பிற்காக மத்திய அரசு கீழ் இயங்கி வரும் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 2 சதவீதம் வரை பங்களிப்பினை குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் விரைவில் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் கையில் பெறும் சம்பளம் அதிகரிக்கவும்.
பயனாளிகள்
தற்போது பிஎப் திட்டத்தின் கீழ் 10 கோடி நபர்கள் உள்ள நிலையில் அதனை 50 கோடியாக அதிகரிக்கும் எண்ணத்திலும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எப்போது முடிவெடுக்கப்படும்?
தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவலின் படி ஆகஸ்ட் இறுதிக்குள் இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
சம்பளத்தில் தாக்கம் எப்படி இருக்கும்?
பொதுவாக நிறுவனங்கள் சிடிசி அடிப்படையில் தான் சம்பளத்தினை அளிக்கின்றன. அதில் உள்ள பிஎப் பங்களிப்பு 4 சதவீதம் குறைந்தால் கைக்கு வரும் சம்பளம் கண்டிப்பாக அதிகரிக்கும்.
பாதிப்பு
பிஎப் பங்களிப்பு குறைவதால் கைக்கு வரும் சம்பளம் அதிகரிக்கும் என்றாலும் வருங்காலத்தில் உங்கள் பாதுகாப்பிற்காகச் சேமித்து வந்த தொகையின் அளவு குறையும். எனவே நீங்கள் செய்யும் பிற முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற நிலையும் உருவாகும்.
வருங்கால வைப்பு நிதியம் எங்கு முதலீடு செய்கிறது?
பிஎப் திட்டங்களின் கீழ் பெறப்படும் பணத்தினை வருங்கால வைப்பு நிதியம் நிலையான பத்திர திட்டங்களில் தான் முதலீடு செய்து வந்த நிலையில் அன்மையில் தான் நிப்டி 50, சென்செக்ஸ், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பாரத் 22 குறியீடுகள் போன்றவற்றில் மட்டும் தான் முதலீடு செய்து வருகிறது. ஆனால் நேரடியாக எந்த நிறுவனத்தின் பங்குகளையும் வாங்குவதில்லை.
முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை
2018 ஜூன் மாத கணக்கின் படி வருங்கால வைப்பு நிதியம் 48,946 கோடி ரூபாயினைப் பங்கு சந்தைச் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்துள்ளது என்று தொழிலாளர் துறை அமைச்சரான சந்தேஷ் கங்வர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். 2015 மார்ச் 31 முதல் பிஎப் பணம் ஈடிஎப் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது.