வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தியாவில் யூபிஐ பணப் பரிவர்த்தனை சேவைவினை வழங்குவதற்காகச் சோதனை பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில் மத்திய அரசின் திடீர் முடிவால் புதிய சிக்கல் ஒன்றைச் சந்திக்க உள்ளது.
பணப் பரிவர்த்தனை சேவைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கினாலும் அதனை இந்தியாவில் அலுவலகம் அமைத்து மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை வழங்கியதால் வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு மிகப் பெரிய சிக்கல் எழுந்துள்ளது.
பேமெண்ட்ஸ் சேவை
இந்திய அரசின் இந்தப் புதிய விதிகளால் வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் சேவை வணிக ரீதியாகத் தொடங்க மேலும் சில காலம் எடுக்கும் எனத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
அலுவலகம்
மத்திய அரசு வாட்ஸ்ஆப் பணப் பரிவர்த்தனை சேவையினைத் துவங்க வேண்டும் என்றால் இந்தியாவில் அலுவலகம் இருக்க வேண்டும் என்றும் வெளிநாடுகளில் இருந்து கட்டுப்படுத்த அனுமதிகள் வழங்கப்பட மாட்டாது என்பது முக்கிய விதி என்றும் மத்திய அரசு தரப்பு கூறியுள்ளது என்பதை மட்டும் வாட்ஸ்ஆப் தரப்பு உறுதி செய்துள்ளது.
பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்தியாவில் அலுவலகம் இருந்தாலும் அதன் துணை நிறுவனமான வாட்ஸ்ஆப்க்கு எந்த ஒரு அலுவலகமும் இல்லை.
வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப் நிறுவனம் தங்களது செயலியினை அதிகளவில் இந்தியர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், முதலீடுகளை அதிகரிக்க இருக்கும் காரணத்தினாலும் உள்ளூர் தலைவர்களைப் பணிக்கு எடுக்க இருக்கிறது என்றும் எனவே விரைவில் இந்தியாவில் வாட்ஸ்ஆப் அலுவலகத்தினைத் திறப்பது உறுதி என்றும் தகவல்கள் கூறுகின்றன.
புகார்களுக்கு யார் பொறுப்பு?
வாட்ஸ்ஆப்-ல் பணப் பரிவர்த்தனை செய்யும் போது அதில் வரும் புகார்களுக்கு, சிக்கல்களுக்கு யார் பொறுப்பு என்பது தற்போது வரை கேள்விக்குரியதாக உள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனம் வங்கிகளிடம் இருந்து சேவையினைப் பெறுகிறது, வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே இந்தச் சட்டங்கள் எங்களுக்குப் பொறுத்தது என்றும் கூறி வருகிறது.
போலி செய்திகள்
அது மட்டும் இல்லாமல் மத்திய அரசு, வாட்ஸ்ஆப் இடையிலான கூட்டத்தில் போலி செய்திகள் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அசல் தகவல், பகிரப்பட்ட தகவல், குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே தகவல்கள் பகிர முடியும் என்பது போன்ற விதிகள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.