முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் பிராண்ட்பேன்ட் சேவை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், இச்சேவையை இந்தியா முழுவதும் கொண்டு வர சுமார் 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக ஜியோ பிராண்ட்பேன்ட் சேவை மட்டும் அல்லாமல் கேபிள் டிவி, மற்றும் டிசிஹெச் சேவையும் இத்திட்டத்தின் கீழ் வழங்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே ஜியோ நிறுவனத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைச் செய்துள்ள நிலையில், தற்போது பிராண்ட்பேன்ட் சேவைக்காக 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோஜிகாபைபர் சேவையை இந்தியாவின் 1,100 நகரங்கள் மற்றும் டவுன் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளது. இதன் மூலம் பிராண்ட்பேன்ட் சேவையில் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற ரிலையன்ஸ் ஜியோ இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
ஜியோவின் ஜியோஜிகாபைபர் சேவையைப் பெற விரும்புவோருக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பதிவு செய்ய வாய்ப்பை ஜியோ அளிக்கிறது.