உலகின் அதிவேக இணையதளச் சேவை வழங்கக் கூடிய 5ஜி அலைக்கற்றை ஏல விற்பனைக்கு இந்திய தொலைத் தொடர்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட 5ஜி, இணைய உலகத்தில் பல புதுமைளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பு வாய்ந்த அலைக்கற்றை
அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் நாட்டிலேயே மதிப்பு வாய்ந்த மிகப்பெரிய ஏலமாக இது கருதப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தைக் காட்டிலும், 5.63 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் விற்பனையாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 700 மெகாஹெர்ட்ஸ்-க்கு 4 டிரில்லியன் வரை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஏலத்தைப் புறக்கணிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
டிஜிட்டல் இந்தியாவின் புரட்சி
5ஜி அலைக்கற்றைகள் தொழில்நுட்ப அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டுள்ளன. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆர்வத்தைப் பொறுத்து ஏலத்துக்கான தேதியை முடிவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் போட்டியில் வருமானமும், லாபமும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் நிதி நெருக்கடிகளில் சிக்கியுள்ளன. 5ஜி தொழில்நுட்பம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் புரட்சியாக முன்னெடுப்பதற்காக, மத்திய அரசு மிகுந்து ஆர்வம் காட்டுகிறது.
முடங்கிய அலைக்கற்றைகள்
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 60 விழுக்காடு அலைக்கற்றைகள் விற்பனையாகாமல் முடங்கின. ஏலத்தில் எடுக்கப்பட்ட அலைக்கற்றைகளையும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இதுவரை பயன்படுத்தாமல் வைத்துள்ளன.
விலையைக் குறைக்க முடிவு
700 மெகாஹெர்ட்சில் ஒரு அலைக்கற்றை 65.68 பில்லியானாக மதிப்பிடப்பட்டுள்ளது.இது 2016 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 42 சதவீதம் குறைவாகும். 2016 ஆம் ஆண்டு விற்கப்படாத அலைக்கற்றைகளுக்கு விலையைக் குறைத்து கடைவிரிக்கவும் தொலைத் தொடர்பு ஆணையம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விலை நிர்ணயம்
1800 மெகாஹெர்ட்ஸின் ஒரு அலைக்கற்றை 32.85 பில்லியானாக நிர்ணயம் செய்துள்ளது. 5ஜிக்குப் பயன்படுத்தப்படும் 3300-3600 மெகா ஹெர்ட்ஸின் அலைக்கற்றை முதன் முறையாக நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
டிராயின் நம்பிக்கை
டிசம்பர் மாதத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளின் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜிக்கு பயன்படுத்தக்கூடிய அலைக்கற்றைகள் அடையாளம் காணும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அலைக்கற்றைகளை முழுமையாக ஏலத்தில் விட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள டிராய், 50 சதவீதம் அலைக்கற்றை விற்று முதலாக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பல்வேறு அலைக்கற்றைகளுக்கு விலையைக் குறைக்கும் முடிவுக்குத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேநேரம் பயன்பாட்டுக் கட்டணம், உரிமம் கட்டணம் மற்றும் வசூலிக்கப்படும் பிற வரிகளைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன. 5ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டவுடன் சேவையைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
5ஜி எதிர்பார்ப்பு
இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்பத்தை வணிக ரீதியில் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் மீதான ஏலம் 2019 ஆம் ஆண்டு நடைபெறும் என யூகிக்கப்படுகிறது. எதிர்பார்ப்பில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என்றே சொல்லப்படுகிறது.