இந்தியாவின் மிகப் பெரிய அடைமான கடன் வழங்கும் எச்டிஎப்சி நிறுவனம் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தினைப் புதன்கிழமை உயர்த்திய அடுத்த நாளே 0.20 சதவீதம் வரை தங்களது கடன் திட்டங்களின் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி புதன் கிழமை ரெப்போ வட்டி விகிதத்தினை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ரிடெயில் கடன் திட்டங்கள்
எச்டிஎப்சி நிறுவனமானது தங்களது ரிடெயில் பிரைம் கடன் திட்டங்களின் மீதான வட்டி விகிதங்களை 0.20 சதவீதம் வரை 2018 ஆகஸ்ட் 1 தேதி முதல் உயர்த்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் எச்டிஎப்சி நிறுவனத்தில் மிதக்கும் வட்டி விகித திட்டங்களின் கடன் வாங்கியுள்ளவர்களின் பட்ஜெட் நடப்பு மாதம் அதிகரித்துள்ளது.
எச்டிஎப்சி
தற்போது எச்டிஎப்சி நிறுவனத்தில் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ள பெண் வாடிக்கையாளர்களுக்கு 8.7 சதவீதமாகவும், 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் வாங்குபவர்களுக்கு 8.8 சதவீதமாகவும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிறருக்குக் கூடுதலாக 0.05 சதவீதம் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி தற்போது 30 லட்சம் வரையிலான கடனை பெறும் பெண் வாடிக்கையாளர்களுக்கு 8.55 சதவீத வட்டி விகிதமும், 30 லட்சம் முதல் 75 லட்சம் வரையிலான கடன் திட்டங்களுக்கு 8.65 சதவீதமாகவும் , 75 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் வாங்கும் போது 8.7 சதவீதமாகவும் வட்டி விகிதத்தில் வழங்கி வருகிறது. பிறருக்குக் கூடுதலாக 0.05 சதவீதம் வட்டி விகிதம் அதிகமாகும்.
எஸ்பிஐ
எஸ்பிஐ வங்கி தான் தற்போது இருப்பதிலேயே குறைந்த வட்டி விகிதமான 8.45 சதவீதத்தில் கடனை வழங்கி வருகிறது. இதிலும் ஊழியர்களின் சம்பளம், நிலை போன்றவற்றைப் பொருத்து வட்டி விகிதம் மாறும்.