ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே நட்டத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸூம் பணம் இல்லாமல் கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பங்குகளை விற்கும் முடிவில் தீவரமாகச் செயல்பட்டு வருகிறது.
ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயல் முதலீட்டாளர்களின் குறிப்பிட்ட அளவிலான பங்குகளை விற்க விரும்புகிறார். அதனைச் செய்வது காலத் தாமதமானால் 60 நாட்கள் மட்டுமே விமானச் சேவை அளிக்க முடியும் என்று ஊழியர்களின் தெரிவித்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன.
எவ்வளவு கடன் உள்ளது?
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 8,424 கோடி ரூபாய் கடன் உள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து சேவை வழங்கி வரும் நிலையில் 2016 மற்றும் 2017 நிதி ஆண்டில் தான் லாபத்தினைப் பதிஹ்வு செய்து இருந்தது. 2017-2018 நிதி ஆண்டிலும் 1,040 கோடி ரூபாயினை நட்டம் அடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
போட்டி நிறுவனங்கள்
ஜெட் ஏர்வேஸ் நட்டத்தினைப் பதிவு செய்துள்ள அதே நேரம் சென்ற நிதி ஆண்டில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 566.66 கோடி ரூபாய் லாபத்தினைப் பதிவு செய்துள்ளது. மேலும் இண்டிகோ நிறுவனம் உச்சபட்சமாக 2,242.37 கோடி ரூபாய் லாபத்தினைப் பதிவு செய்துள்ளது.
சாடல்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த நிலைக்குப் பெட்ரோல் விலை உயர்வு, விரிவாக்கம் செய்யாதது போன்றவையே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பங்குகள் விற்பனை
சில மாதங்களுக்கு முன்பே பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்ட நிலையில் முதலீட்டாளர்கள் பங்குகளுக்குப் பிரீமியம் தொகை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதால் அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இவர்களுக்கு உள்ள அவசரம் சற்று வித்தியாசமானதாக உள்ளது.ஜெட் ஏர்வேஸில் உள்ள மொத்த பங்குகளை எதியாட் நிறுவனம் டிசம்பர் மாதத்திற்குள் மொத்தமாக விற்கும் என்று மார்ச் மாதமே தெரிவித்து இருந்தது.
செலவு குறைப்பு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் விமான ஓட்டிகளின் சம்பளத்தினை 25 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. இதே போன்று சென்ற வருடம் ஜூனியர் விமான ஓட்டிகளை 30 முதல் 50 சதவீத வரை சம்பள குறைவுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் வெளியேறலாம் என்று அறிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. நிர்வாகிகளும் குறைந்த சம்பளத்தினைப் பெற ஒப்புக்கொண்டதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
பணி நீக்கங்கள்
ஜெட் ஏர்வேஸ் பலதரப்பட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ள நிலையில் விமான ஓட்டிகளுக்கு மட்டும் சம்பள குறைப்பினை செய்துள்ளது. ஊழியர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டும் தான் இயங்கு என்று ஊழியர்கள் தரப்பில் இருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.