ஜிஎஸ்டி கவுன்சிலின் 29வது கூட்டம் இன்று நடைபெற்று வந்த நிலையில் பிம் யூபிஐ மற்றும் ரூபே கார்டுகள் வழியாகப் பணம் செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்க வரித் தொகையில் 20 சதவீதம் கேஷ்பேக் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேஷ்பேக்
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி-ல் சீர்திருத்தங்களைக் கொண்டு வர அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தினைத் தலைமை தாங்கி நடத்தி வந்த பியூஷ் கோயல் பிம் யூபிஐ மற்றும் ரூபே கார்டுகள் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் சோதனை முயற்சியாக 100 ரூபாய் வரை வரித் தொகையில் கேஷ்பேக் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் குழு ஒப்புதல்
டிஜிட்டல் முறையில் வரி செலுத்தும் போது கேஷ்பேக் வழங்குவது குறித்து அமைச்சர்கள் குழுவிற்குத் தெரிவித்து அனுமதிகளைப் பெற்ற பிறகு பிம் செயலி மற்றும் ரூபே கார்டுகளுக்கு மட்டும் கேஷ்பேக் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்?
எனவே நாம் எந்த ஒரு பொருட்களை வாங்கும் போதும் அதற்கு 500 ரூபாய் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்றால் பிம் யூபிஐ செயலி அல்லது ரூபே கார்டுகள் பயன்படுத்திக் கட்டணம் செலுத்தும் போது 100 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இந்தச் சேவை எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்ட உள்ளது என்பது மாநிலங்களின் கைகளில் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
சோதனை முயற்சி
சோதனை கேஷ்பேக் திட்டம் வெற்றி பெற்றால் பிற கார்டுகள் மற்றும் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்கி அதற்கு வரிச் செலுத்தும்பட்சத்தில் அவர்களுக்குக் கேஷ்பேக் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரம் சில மாநிலங்கள் இந்தக் கேஷ்பேக் சேவையால் வரி வருவாய்ப் பாதிக்கப்படும் என்று ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.