வங்கிகளில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்றுள்ள கடன்காரர்கள், முன் அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தேவைப்பட்டால் கடவுச் சீட்டுகளை ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளது.
பாஸ்போர்ட் ரத்து
நிதி அமைச்சக செயலாளர் ராஜீவ்குமார் தலைமையிலான குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வங்கி கடனாளிகளால் ஏற்படும் நிதி மற்றும் பொருளாதார ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு இந்திய பாஸ்போர்ட்
சட்டம் 10 இல் திருத்தம் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. இதன்படி பாஸ்போட்டை பறிமுதல் செய்யவோ, ரத்து செய்யவோ முடியும்
விவரங்கள் சேகரிப்பு
50 கோடிக்கு மேல் கடன் பெற்ற கடனாளிகளின் பாஸ்போர்ட் விவரங்களைச் சேகரிக்குமாறு, வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களின் வெளிநாட்டுப் பயணம் நியாயமானதாகவும், சட்டப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
வெளிநாட்டுப்பயணத்துக்குத் தடை
வரையறுக்கப்பட்டதற்கு எதிராகக் கடன் பெற்றவர்களின் விவரங்களை உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி வெளிநாடு பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.
உயர்மட்டக்குழுக்கள்
விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அமலாக்கத்துறை மற்றும் நடுவண் புலனாய்வுத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவைப் பரிந்துரை செய்துள்ளது.
மோசடி பேர்வழிகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற நீரவ் மோடி, மற்றும் கிங் பிஷர் அதிபர் விஜய் மல்லையா ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால் மோசடி பேர்வழிகள் என்று அறிவிக்கப்பட்டள்ளனர்.
எச்சரிக்கை
வங்கி அமைப்பைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் ஈடுபட்டுள்ள நிதி அமைச்சகம் என்.பி.ஏ கணக்குகளை ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும் மோசடி நோக்கத்துடன் கடன் பெற்றிருந்தால் மோசடிப் பேர்வழிகளாக அறிவிக்கப்படுவார்கள் என ஆர்.பி.ஐ வழிகாட்டு நெறிமுறை எச்சரித்துள்ளது.