இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி தனது உற்பத்தி அளவை மேம்படுத்த டோயோட்டா உடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இதன் மூலம் டோயோட்டா கிரிலோஸ்கார் நிறுவனங்கள் பெங்களுரூ பிடாடி தொழிற்சாலையில் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்து தனது உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
7000 கோடி ரூபாய்
மாருதி சுசூகி நிறுவனம் இந்த முடிவின் மூலம் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 7000 கோடி ரூபாய்.
மறு சீரமைப்பு
இந்த முதலீட்டில் ஒரு பகுதி டோயோட்டாவின் உற்பத்தி தளத்தை மாருதி சுசூகி நிறுவனத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதற்காகச் செலவிடப்பட உள்ளது.
மாருதி சுசூகி
இந்தியாவில் அதிகக் கார்களைத் தயாரிக்கும் நிறுவனம் எனப் பெருமையை மட்டும் அல்லாமல் வேகமாகக் கார்களைத் தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயரையும் மாருதி சுசூகி பெற்றுள்ளது. இந்நிலையில் இப்புதிய முதலீடு மூலம் தனது உற்பத்தி அளவில் அடுத்த ஒரு வருட காலத்திற்குள் குறைந்தபட்சம் 10-15 சதவீதம் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
3 லட்சம் கார்கள்
டோயோட்டா கிரிலோஸ்கார் நிறுவனத்தின் பிடாடி தொழிற்சாலையில் வருடம் 3 லட்சம் கார்களைத் தயாரிக்க முடியும், ஆனால் இந்தத் தொழிற்சாலை இதுவரை 50 சதவீதம் வரையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் நிறுவனம்
இந்த 50 சதவீத உற்பத்தி தளத்தைத் தான் டோயோட்டா நிறுவனம் மாருதி சுசூகி நிறுவனத்திற்கு அளித்துள்ளது. இதன் மூலம் இரண்டு ஜப்பான் நிறுவனங்களுக்கும் இது லாபகரமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.