சம்பளக் குறைப்பு நடவடிக்கையில் பின்வாங்க மறுக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 15 சதவீத ஊதிய வெட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பிங்க் ஸ்லிப் எனப்படும் வேலை நீக்க உத்தரவு மூலம் 500 பேரை வீட்டுக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது.
10 சதவீத ஆட்குறைப்பு
16,558 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வரும் ஜெட்வேஸ், கணிசமாக 10 சதவீத ஊழியர்கள் வேலையில் நீடிக்கத் தேவையில்லை என கருதுகிறது. விமானப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், சம்பளத்தை 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை நிர்ணயிக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஒப்பந்தங்கள் ரத்து
பிரஷர்களின் ஊதியத்தை விட மூத்த விமானப் பணியாளர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதாகக் கருதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அவர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்யவும் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு விமானங்களின் பணிபுரியும் மூத்த விமானிகளுக்கு தற்போது 70,000 முதல் 80,00 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பிரஷர்களுக்கு 40,000 முதல் 50000 ஆயிரம் வரைதான் அளிக்கப்படுகிறது. உள்நாட்டு விமானங்களில் மூத்த பணியாளர்களுக்கு 50000 முதல் 60000 ஆயிரமும், இளநிலை பணியாளர்களுக்கு 40000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
எதிர்மறையான விளைவு
விமானப் பணியாளர்கள் மற்றும் கடை நிலை ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தையும், நம்பகத்தன்மையையும் ஏற்படுத்திவிடும் என அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று முக்கிய அறிவிப்பு
500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக வெளியாகியுள்ள தகவலை மறுத்த அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து சிந்திக்கவில்லை என்றார். நடப்பு நிதி ஆண்டில் ஊதியத்துக்காக 2995.35 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்தச் செலவினங்களை குறைப்பதற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என புளூம்பர்க் தெரிவித்துள்ளது.