இரயில் பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்திய ரெயில்வே நிறுவனம், டிஜிலாக்கரில் உள்ள ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமங்களின் மென்பிரதியை(Softcopy) செல்லத்தக்க அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடிவுசெய்துள்ளது.
கடிதம்
ரெயில்வே நிர்வாகம் தனது அனைத்து மண்டல முதன்மை வர்த்தக மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், டிஜிலாக்கர் சேவை மூலம் காண்பிக்கப்படும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு அடையாள அட்டைகளும் பயணிகளின் அடையாள ஆவணமான ஏற்றுக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.
டிஜிலாக்கர் கணக்கு
"பயணிகள் தங்களின் டிஜிலாக்கர் கணக்கில் உள்நுழைந்து, 'வழங்கப்பட்ட ஆவணங்கள்' (Issued Documents) என்னும் பகுதியில் உள்ள ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார்அட்டையைக் காண்பித்தால், அதையே தக்க அடையாள ஆவணமாகக் கருதலாம்" என அந்த உத்தரவு கூறுகிறது. அதே நேரம் பயணிகள் தாங்களாகப் பதிவேற்றம் செய்து ' பதிவேற்றப்பட்ட ஆவணங்கள்' (Uploaded Documents) என்ற பகுதியில் உள்ள ஆவணங்களைத் தக்க அடையாள ஆவணமாகக் கருதமுடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
டிஜிலாக்கர் என்றால் என்ன?
டிஜிலாக்கர் என்பது இந்திய குடிமக்கள் தங்களின் முக்கிய ஆவணங்களைக் கிளவுட்-ல் சேமித்து வைக்க அரசாங்கத்தால் வழங்கப்படும் டிஜிட்டல் சேமிப்புச் சேவையாகும்.
ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார்
பிரதமர் நரேந்திர மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது டிஜிலாக்கரில் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதாரை சேமிக்க முடியும். கிளவுட்-ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்தத் தளமானது, தற்போது சிபிஎஸ்சி உடன் இணைந்து மாணவர்களின் டிஜிட்டல் வெர்சன் மதிப்பெண் பட்டியலையும் வழங்குகிறது.