தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்குக் குடிமைப்பணி தேர்வுகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார், தேர்வு எழுதுவதற்கு வசதியாக வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பீகார்
அரசு அலுவலகங்களில் காலியான இடங்களின் விவரங்கள், பீகார் மாநில சர்வீஸ் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் 7 நகர நிர்வாக அதிகாரிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்டு 20 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வெகுமதி
மாநில தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் குடிமைப்பணி தேர்வுகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியைப் பீகார் மாநில அரசு தொடங்கியுள்ளது. பீகார் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் பங்கேற்கும் தகுதி உள்ள மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், குடிமைப் பணி தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என நிதீஷ்குமார் கூறியுள்ளார்.
பதவி உயர்வில் முன்னுரிமை
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் பதவி உயர்வுகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனப் பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது.
விளக்கம்
பதவி உயர்வுகளும், இடஒதுக்கீடுகளும் நீதிமன்ற ஆணைகளுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அரசின் உயர்மட்டக்குழுவின் பரிந்துரைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதீஷ்குமார் கூறியுள்ளார்.