டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட கார்களின் விலைகள் ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையில், விலைவாசி விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து நிறுவனங்களின் கார்களுக்கும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமாக ரெனால்ட், விலைகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாருதி சுசுகி விலை உயர்வு
மாருதி சுசுகி நிறுவனம் அனைத்து மகிழுந்துகளின் விலையில் 6,100 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமுலுக்கு வருகிறது. விலை உயர்ந்த கார்களை தயாரித்து வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதம் முதல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
2 விழுக்காடு அதிகரிப்பு
டாடா மோட்டார்ஸ் மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனங்கள் ஆகஸ்டு 1 ஆம் தேதியிலிருந்து கார்களின் விலையை உயர்த்தியுள்ளன. டாடா தனது அனைதது வகை கார்களுக்கும் 2 சதவீதம் விலையை அதிகரித்துள்ளது. மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் 2 விழுக்காடு முதல் 30, 000 ரூபாய் வரை விலையை உயர்த்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் ஐ டென் வகை கார்களுக்கு விலையை அதிகரித்துள்ளது.
போர்டு விலை எகிறியது
போர்டு நிறுவனம் 1 முதல் 3 விழுக்காடு வரை விலையை உயர்த்தியுள்ள நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது தயாரிப்புகளான அமேஷ், சிட்டி, பி.ஆர்.வி வகை கார்களுக்கு விலையை அதிகரித்தது.
மாற்றம் இல்லை
பி.எம்.டபிள்யூ, வால்வோ, வோல்க்ஸ் வேகன், டொயோட்டா உள்ளிட்ட கார்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
காரணம் இதுதான்
இது தொடர்பாக பேசிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி ரோலண்ட் போல்கர், சாதமில்லாத அந்நிய செலாவணி, பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக விலை உயர்த்தப்பட்டதாக கூறினார். தற்போது நிலவும் ரூபாயின் வீழ்ச்சியும் இதற்கு காரணம் என்றார்.