பாலின வேறுபாடுகளால் வாய்ப்புகளை இழந்து வந்த பெண்களுக்கு, டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கத் தொடங்கியிருப்பதால், ஆண்டுக்கு ஆண்டு வாகன உற்பத்தித் துறையில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 30 சதவீதம் பெண்களை விற்பனை பிரிவுகளில் வேலைக்கு அமர்த்தத் திட்டமிட்டுள்ள இந்த நிறுவனங்கள், பொருளாதாரத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பட்டப்படிப்புகளை முடித்த பெண்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.
பெண்களுக்கு முன்னுரிமை
ஸ்கூட்டர்ஸ், கார் போன்ற உற்பத்தி பிரிவுகளில் மட்டுமில்லாமல், டிராக்டர் மற்றும் கனரக வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஈச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களில் பெண்கள் முன்னுரிமை அடிப்படையில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
பெண்களின் வளர்ச்சி
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களை வேலைக்கு அமர்த்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பிலிருந்து கல்வி பெற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. ஜூலை 31 நிலவரப்படி 1812 பேர் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வருகின்றனர்.
பணி வாய்ப்புகள்
2016 ஆம் ஆண்டில் 23 பெண்கள் மட்டுமே வேலை பார்த்த மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தில், தற்போது 380 ஆக அதிகரித்துள்ளது. பண்ணைப் பிரிவு, ஸ்வராஜ் பிரிவுகளில் 250 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலைகளில் பெண்கள்
ராயல் என்பீல்டு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தில் எந்திரக் கோர்ப்பு பிரிவில் 140 பேர் முன்னுரிமை அடிப்படையில் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஹீரோ மோட்டார்ஸின் தேஜஸ்வனி திட்டத்தில் 160 பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
எண்ணிக்கை உயர்வு
பஜாஜ் ஆட்டோவின் மகளிர் மட்டும் திட்டத்தின் மூலம் 355 பெண்கள் வேலை வாய்ப்பில் உள்ளனர். 2013-14 ஆம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை 55 ஆக இருந்தது.
பாலின வேறுபாட்டுக்கு முடிவு
பாலின வேறுபாடுகளால் வாய்ப்புகளை இழந்து வந்த பெண்களுக்கு வாகன உற்பத்தித் துறை கதவுகளைத் திறந்து விட்டதால், சமுதாயத்தில் அவர்கள் தன்னாட்சி பெற்று வருவது புலனாகிறது. பெண்களுக்கான நன்மை சமூகத்துக்கு நல்லது. சமூகத்தில் விளையும் நலன் வர்த்தகத்துக்கு நல்லது என்று டாடா மோட்டார்ஸின் அதிகாரி கஜேந்திர கண்ட் தெரிவித்தார். பாலின வேறுபாட்டைக் களைய சில உள் இலக்குகளைப் பின்பற்றி வருவதாக வும் அவர் கூறினார்.
கலாச்சார மேம்பாடு
விற்பனை பிரிவில் பெண்களைப் பணிக்கு அமர்த்துவதன் மூலம் கலாச்சார மேம்பாட்டை உருவாக்க முடியும் என்று கருதுவதாக கூறும், மகிந்திரா நிறுவனத்தின் அதிகாரி ராஜேஸ்வர் திரிபாதி, பல பெண்கள் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பொறியாளர் பணி
வாகன விற்பனை பிரிவில் அடுத்த 5 ஆண்டுகளில் 30 விழுக்காடு பெண்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ள நிறுவனங்கள்,பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை பெண்களிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.