மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழுக்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய அமேசான் முன்வந்துள்ள நிலையில், அதற்கான கைவினைக் கொள்கை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் பட்னாவிஸ் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
மூங்கில் பொருட்களுக்கும், காதி உற்பத்திக்கும் உலகச் சந்தையின் சாளரம் திறக்கப்பட்டுள்ளதால், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்சாகமடைந்துள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஒப்பந்தம் ஒன்றில் அமேசான் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் பட்னாவிஸ் முன்னிலையில் மகாராஷ்டிர அரசு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மீண்டும் கையெழுத்திடுகிறது.
விற்பனை முகமை
மூங்கில் பொருள் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் காதி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை, மகிளா ஆர்த்திக் விகாஷ் மகாமண்டல் மூலம் அமசான் தளத்தில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விற்பனைக்கு வரும் பொருட்கள்
விற்பனை செய்யப்படும் பொருட்களின் மதிப்பு பற்றியோ, அதன் வருவாய் பற்றியோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. மூங்கில் பொருட்கள், உணவுப் பொருட்கள், பழங்குடியின மக்களால் தயாரிக்கப்பட்ட தோல் பொருட்கள், தோல் பை, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும். இதற்கான களப்பணிகளை அம்மாநில சிறு தொழில் அபிவிருத்தி வங்கியும், மாநகராட்சியும் ஈடுபட்டுள்ளது
கைவினைக் கொள்கை
கைவினைத் திட்டம் ஒன்றைக் கொண்டுவரும் பொருட்டு, கைத்தொழில் கொள்கை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான பணிகளை முதலமைச்சரின் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான சாராம்சங்கள் ஆவணப்படுத்தப்பட்டவுடன் கைத்தொழில் கொள்கை வெளியிடப்படவுள்ளது.