13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் ,நொய்டாவில் உள்ள ஒருங்கிணைந்த தொழிற்சாலை நகரில் மிகப்பெரிய முதலீடுகளைப் போட பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன. 3,069 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ள ஹெயர் அப்ளிகேஷன்ஸ் நிறுவனம், நான்காயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளது.
நிலம் ஒதுக்கீடு
டெல்லி மும்பை இன்டஸ்ட்ரியல் காரிடோர் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் இதனைத் தெரிவித்துள்ளது.ஒருங்கிணைந்த தொழிற்சாலை நகரமான கிரேட்டர் நொய்டாவில் 123.7 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. ஹெயர் மின்னணு உற்பத்தி நிறுவனம் மூலம் நான்காயிரம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்
மொபைல் தயாரிப்பு ஆலை
சீன மொபைல் தயாரிப்பாளரான ஃபார்யே டிரேடிங் நிறுவனத்துக்கு 3.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.100 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகவுள்ள மொபைல் தொழிற்சாலையில் 600 பேர் நேரடியாகவும் 1,000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். ஃபெண்டா ஆடியோ இந்தியாவின் கிளை நிறுவனமான சத்ரிதி இன்போடெயின்மென்ட்க்கும் நொய்டா தொழில் நகரத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
13000 பேருக்கு வேலை
மூன்று நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முதலீடு 3,404 கோடி ரூபாயாக உள்ளது. இதன்மூலம் 12,550 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. டெல்லி மும்பை தொழில் முனைய மேம்பாட்டுக் கழகம் 56 கிரீன்ஃபீல்ட் ஸ்மார்ட் தொழிற்துறை நகரங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது.