கோயம்புத்தூர்: இஞ்சினியரங் நிறுவனமான கிரீவ்ஸ் காட்டன் கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 2 சக்கர எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஆம்பியர் வெஹிக்கல்ஸை வாங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மும்பையினைத் தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிரீவ்ஸ் காட்டன் 77 கோடி ரூபாய் கொடுத்து ஆம்பியர் நிறுவனத்தின் 67 சதவீத பங்குகள் வாங்க முடிவு செய்துள்ளது.
இரண்டாம் கட்ட பங்குகள் விற்பனை
மேலும் அடுத்த மூன்று ஆண்டில் ஆம்பியர் நிறுவனத்தின் 13 சதவீத பங்குகளை 75.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கும் என்று பங்கு சந்தையில் கிரீவ்ஸ் காட்டன் தாக்கல் செய்ததில் இருந்து தெரிய வந்துள்ளது.
எப்போது பரிவர்த்தனை முடிவடையும்?
முதற்கட்ட பங்குகள் விற்பனையானது டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
முக்கிய முதலீட்டாளர்கள்
ஆம்பியர் நிறுவனத்தில் டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா மற்றும் இன்போசிஸ் இணை நிறுவனரான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் 2015-ம் ஆண்டே முதலீடு செய்துள்ளனர்.
போட்டி நிறுவனங்கள்
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் அந்தென் எனர்ஜி நிறுவனத்தினையும், டிவிஎஸ் மோட்டார்ஸ் அல்ட்ராவையோலெட்டே ஆட்டோமோட்டிவ் நிறுவனத்திலும் முதலீடுகளைச் செய்துள்ள நிலையில் இவர்களுக்குப் போட்டியாகக் கிரீவ்ஸ் காட்டன் ஆம்பியரை வாங்குவதன் மூலம் எலக்ட்ரிக் 2 சக்கர வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளது.
ஆம்பியர்
2008-ம் ஆண்டுக் கோயம்புத்தூரினை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஆம்பியர் 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 16 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் வாகன வடிவமைப்பு, உற்பத்தி, உருவாக்கம், விற்பனை என அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
கிரீவ்ஸ் காட்டன்
கிரீவ்ஸ் காட்டன் பெட்ரோல் மற்றும் டீசல் 2 சக்கர வாகனங்களின் எஞ்சின்களைத் தயாரித்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் எலக்ட்ரிக் சாதனங்கள் மற்றும் ஜெனரேட்டர் போன்றவற்றையும் தயாரித்து வருகிறது. நாடு முழுவதும் 5000 ரீடெய்லர்கள் மூலம் மிகப் பெரிய சந்தையினைத் தன் வசம் வைத்துள்ளது.
கிரீவிஸ் மற்றும் ஆம்பியர் நிறுவனங்கள் இணைவது என்பது எலக்ட்ரிக் வாகன துறையில் மிகப் பெரிய மாற்றத்தினைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.