நிரந்தரக் கணக்கு எண்ணான பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது இனி தந்தையின் பெயர் கட்டாயம் இல்லை என்ற முடிவினை வருமான வரித் துறை இன்று எடுத்துள்ளது.
இது குறித்துத் தயாரிக்கப்பட்ட வரைவரிக்கையில் ஒற்றைப் பெற்றோரின் பிள்ளைகள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது இனி தந்தையின் பெயருக்குப் பதிலாகத் தாயின் பெயரினை குறிப்பிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பான் விண்ணப்பங்கள்
தற்போது உள்ள பான் கார்டு விண்ணப்பத்தில் தந்தையின் பெயரினை குறிப்பிடுவது கட்டாயமாக உள்ள நிலையில் அது விரைவில் தந்தை அல்லது தாயின் பெயராக மாற்றப்பட உள்ளது. இங்குக் குறிப்பிடப்படும் பெயரானது பான் கார்டிலும் அச்சடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுமதிக்காகக் காத்திருப்பு
விண்ணப்பத்தில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் வருமான வரி துறையின் தலைமை இயக்குனர் அல்லது இயக்குனர்-ஜெனரல் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.
பான் கார்டு ஏன் முக்கியம்?
வருமான வரி செலுத்துவதற்கான முக்கிய ஆவணமாகப் பான் கார்டு உள்ளது. பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தல் மட்டுமே மின்னணு முறையில் வருமான வரியைத் தாக்கல் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பலன்
பான் கார்டு விண்ணப்பத்தில் இந்தத் திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலமாகக் கூடுதலான வருமான வரி செலுத்துனர்கள் பான் கார்டு பெற்று வரியை செலுத்துவார்கள் என்று நிதி அமைச்சகம் எதிர்பார்க்கிறது.