ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விளம்பரத்துக்கு 132.38 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மின்னணு ஊடகங்கள் தவிர, இதர ஊடகங்களில் விளம்பரம் செய்ததில் மட்டும் 5 கோடி ரூபாய்ச் செலவாகியுள்ளதாகக் கூறியுள்ளது. இது தவிர ஜி.எஸ்.டி துதரான அமிதாப்பச்சனுக்கும் ஊதியம் என்ற பெயரில் பெரும் தொகை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
ஜிஎஸ்டி நடைமுறை
ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கை முழக்கத்துடன் சரக்கு மற்றும் சேவை வரியைக் கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நடுவண் அரசு அறிமுகப்படுத்தியது. நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து மாநில சட்டப்பேரவைகளிலும் ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்துவதற்கான சட்டங்கள் வலிந்து திணிக்கப்பட்டன.
விளம்பரங்கள்
சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் விளம்பரங்களும், விழிப்புணர்வு பரப்புரைகளும் செய்யப்பட்டன. கருத்தரங்களும், ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அச்சு ஊடகம், ஒளி ஊடகங்களில் விளம்பரங்கள் வழங்கப்பட்டன.
ரூ.127 கோடி செலவு
பிரமாண்ட விளம்பரங்கள் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் கோரப்பட்டன. இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், அச்சு ஊடகங்களில் செய்யப்பட்ட விளம்பரத்திற்கு 1,26,93,97,121 ரூபாய்ச் செலவானதாகத் தெரிவித்துள்ளது. அதாவது இதற்கு மட்டும் கிட்டத்தட்ட 127 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
5 கோடி ரூபாய் செலவு
மின்னணு ஊடகங்களில் செலவு கிடையாது என்று கூறியுள்ள ஒளிபரப்புத்துறை அமைச்சகம், இதர ஊடகங்களில் விளம்பரப்படுத்த 5,44,35,502 ரூபாய்ச் செலவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.