ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ்ச் உள்ளிட்ட விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடன், நட்டம் என்று சிக்கித் தவித்து வரும் நிலையில் இந்திய விமான நிறுவனங்கள் 2018-2019 நிதி ஆண்டு 1.9 பில்லியன் டாலர் வரை நட்டம் அடையும் என்று விமானப் போக்குவரத்துக் கன்சல்டிங் நிறுவனமான சிஏபிஏ இந்தியா தெரிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் 2019 மார்ச் மாதம் முடிவில் 460 மில்லியன் டாலர் வரை நட்டம் அடைந்திருக்கும் என்று சிஏபிஏ கணித்திருந்தது.
விமானக் கட்டணம்
விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தவில்லை என்றால் இண்டிகோ நிறுவனத்தினை விடப் பிற நிறுவனங்கள் எதுவும் லாபத்தினைப் பதிவு செய்யாது என்றும் சிஏபிஏ தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து
இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளர்ச்சி மிகப் பெரிய அளவில் உள்ள நிலையிலும் விமான எரிபொருள் விலை அதிகம் என்பதால் நட்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தும், 90 சதவீத விமானச் சீட்கள் நிரம்பி பயணம் செய்யப்படும் நிலையிலும் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மிகப் பெரிய சிக்கலில் உள்ளன.
இந்தியா
சர்வதேச அளவில் குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்து சேவை அளிக்கும் நாடாகவும் இந்தியா உள்ளது. கடன், நட்டம், ஊழியர்கள் சம்பள பிரச்சனை எனச் சிக்கி தவித்து வரும் ஏர் இந்தியாவிற்கு மட்டும் 3 பில்லியன் டாலர் கூடுதல் சந்தை மூலதனம் தேவைப்படுகிறது. எப்படியாவது விற்றுவிடலாம் என்று முயன்றும் ஜூன் மாதம் அது தோல்வியில் முடிந்தது.
விமான நிறுவனங்கள்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஜூன் மாத காலாண்டில் 13.23 பில்லியன் ரூபாய் நட்டம் அடைந்ததாக அறிவித்துள்ளது. அதே நேரம் இண்டிகோ நிறுவனம் ஜூன் மாத காலாண்டில் 97 சதவீதம் வரை வருவாய் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.