சமுக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவர் பதவியில் தரன்ஜித் சிங் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்துள்ளார். 16 மாதங்களுக்கு முன்பு தான் தரன்ஜித் சிங்கிற்கு இந்த பதவி கிடைத்தது.
டிவிட்டர் நிறுவனத்தில் தரன்ஜித் சிங் கடந்த நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அதற்கு முன்பு பிபிசி, அவுட்லுக் மேகசின் மற்றும் பயனீர் செய்தித்தாள் நிறுவனத்திலும் முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார்.
அடுத்து யார் டிவிட்டர் இந்தியா தலைவர்?
தரன்ஜித் சிங் ராஜினாமா செய்த நிலையில் டிவிட்டர் இந்தியா தலைவரின் பதவியை வருவாய் மூலோபாயம் மற்றும் நடவடிக்கைகளின் உலகளாவிய தலைவர் பதவியை வகித்து வரும் பாலாஜி கிரிஷ் நிர்வகிக்க உள்ளார்.
தரன்ஜித் சிங்
அக்டோபர் மாதம் தரன்ஜித் சிங் அமெரிக்க டிவிட்டர் அலுவலகம் சென்று தனது பொறுப்புகளை பாலாஜி கிரிஷிடம் ஒப்படைப்பார் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த காரணத்திற்காக இந்த பதவியில் இருந்து இவர் விலகியுள்ளார், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற விவரங்களை தெரிவிக்கவில்லை.
டிவிட்டரின் நிலை
கடந்த சில காலாண்டுகளாகவே டிவிட்டர் தளத்தின் பயனர்கள் எண்ணிக்கை உயராத நிலையிலும், இந்தியாவின் வருவாய் உயர்வு பெரிய அளவில் இல்லாத நிலையில் அதற்காகப் பல முயற்சிகளை தரன்ஜித் சிங் எடுத்தும் அதில் எல்லாம் தோல்வி அடைந்ததால் ராஜினாமா செய்துள்ளார் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
வருவாய் அதிகரிக்கத் திட்டம்
வருவாயினை அதிகரிக்கும் நோக்கத்தில் டிவிட்டர் சென்ற ஆண்டு பிரீமியம் டிவிட் அமைப்பினை அறிமுகம் செய்யும் திட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது.
டிவிட்டர்
அது மட்டும் இல்லாமல் சென்ற ஆண்டு தான் டிவிட்டர் மொபைல் போன்களில் வேகமாக இயங்கக் கூடிய செயலிகளை அறிமுகம் செய்தது. இன்று ஒரு செய்தி டிரெண்ட் ஆகிறது என்றால் அதற்கு டிவிட்டர் ஓர் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.