லட்சக்கணக்கான இபிஎப் சந்தாதார்கள் வெகுவிரைவில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் விருப்ப திட்டமான மோடிகேர் எனப்படும் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பலனடைய உள்ளனர். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தகுதியுள்ள இபிஎப் சந்தாதார்களுக்கு ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் பலன்களை வழங்குவது பற்றிச் சுகாதாரத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவக் காப்பீடு
இபிஎப் சந்தாதார்களுக்கு மருத்துவகாப்பீடு வழங்கப்படவேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கையாகும். இபிஎப் சந்தாதார்கள் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவது என்பது இத்திட்டத்தின் விதிகளைப் பொறுத்தே அமையும் எனக் கூறப்படுகிறது. இந்த முன்மொழிவை இதுவரைக்கும் ஈபிஎப்ஓ-ன் மத்திய அறங்காவலர் குழு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. தற்போதைக்கு இபிஎப் சந்தாதார்கள் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுள்ளதா என்ற சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன. இது ஓய்வூதியதாரரின் பிரிவை பொறுத்தது என்கிறது மத்திய அறங்காவலர் குழு.
ஈபிஎப் சந்தாரார்கள்
"ஈபிஎப் ஓய்வூதியதாரர்கள் உள்பட அனைத்து தகுதியான நபர்களும் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறும் வகையில் தான் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்கிறார் மத்திய அறங்காவலர் குழுவின் உறுப்பினர் ப்ரஜேஷ் உபாத்யாய்.
யாருக்கெல்லாம் பயனளிக்கும்?
மாதாமாதம் ரூ. 1500 ஓய்வூதியமாகப் பெற்றுவரும் 70 முதல் 80% வரையிலான இபிஎப் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய உதவியாக ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள் இருக்கும்.
ஆலோசனை
அடுத்தக் கூட்டத்தில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறாகத் தொழிலாளர்களுக்காக நிறுவனங்கள் செலுத்தும், தொழிலாளர் வைப்புநிதியுடன் இணைந்த காப்பீட்டு சேவையை, ஓய்வூதியதாரர்களின் பீரிமியத்தை அதிகரித்து ஆயுஸ்மான் பாரத் திட்ட பலன்களை நீட்டிக்கலாமா எனவும் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈபிஎப்ஓ
ஈபிஎப் ஆணையத்தால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட தகவலின் படி, 2017 செப்டம்பர் முதல் 2018 மார்ச் வரை புதிதாக 31.10 லட்சம் சந்தாதார்கள் அனைத்து வயது வரம்புகளிலும் சம்பளபட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். "தற்போது வழங்கப்பட்ட தகவல்கள் தற்காலிகமானது தான். ஏனெனில் தொடர்ந்து தொழிலாளர் பதிவேடுகள் சேர்க்கப்பட்டுக் கொண்டே உள்ளன. உண்மையான எண்கள் இதை விட அதிகமாக இருக்கும்" எனப் பிஐபி கூறியுள்ளது.