விவசாயிகளின் வருவாயை உயர்த்த அரும்பாடுபட்டு வருவதாக நாள்தோறும் பேசி வரும் மோடி அரசு, 2016 ஆம் ஆண்டில் மட்டும் 615 பேருக்கு 58 ஆயிரத்து 561 கோடி ரூபாயை விவசாயக் கடனாக வழங்கி இருக்கிறது. தலா ஒரு வங்கிக் கணக்குக்கு மட்டும் 95 கோடி ரூபாயை வழங்கி இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் உண்மையான விவசாயிகளுக்கு ரத்தக்கொதிப்பை ஏற்படுத்தும்.
லட்சக்கணக்கான விவசாயிகள் வேளாண் கடன்களைப் பெறுவதற்குப் படாத பட்டுக் கொண்டிருக்கும்போது, கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்றுள்ள இந்த 615 பேர் யார். விவசாயக் கடன்களை வழங்க வங்கிகள் வைத்திருக்கும் அளவுகோல் என்ன என்பதெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அளித்த தகவல் அதிர்ச்சியைத் தருகின்றன.
விவசாயக் கடன்
வழக்கமான வங்கிக்கடன்களை விடக் குறைவான வட்டி, எளிய முன் நிபந்தனைகளுடன் விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெறும் வங்கிக் கடன்களுக்கு 4 விழுக்காடு மட்டுமே வட்டி விதிக்கப்படுகிறது.
அம்பானிக்கு விவசாயக் கடன்
கடன் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் பெருவாரியான சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் கார்ப்பரேட்டுகளும், பெரிய நிறுவனங்களும் வேளாண் வணிகத்தில் ஈடுபடுவதாகக் கூறி விவசாயக் கடன்களைப் பெறுவதாக்க உண்மையை உடைக்கிறார் ரித்துச் சுவராஜா வேதிகா அமைப்பின் நிறுவனர் கிரண்குமார் வீசா. விளைபொருள் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் ரிலையன்ஸ் பிரஸ் நிறுவனம் விவசாயக் கடன் கீழ் கடன் வாங்குவதாகத் தெரிவித்தார்.
முன்னுரிமைக் கடன்
பொருளாதாரப் பிரிவுகளில் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான ஒரு நிலையான நிதியை, விவசாயத்தில் முதலீடு செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.இதில் ஒரு பகுதி வீட்டு வசதி, கட்டுமானம், ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்களுக்கு முன்னுரிமைக் கடனாக வழங்கப்படுகிறது.
கார்ப்பரேட்டுகளுக்குக் கடன்
வங்கிகள் 18 விழுக்காட்டை விவசாயக் கடனாக வழங்க வேண்டும் எனப் பி.எஸ்.எல் கொள்கை வலியுறுத்துகிறது. வட்டி விகிதங்களும், குறைவான கட்டுப்பாடுகளும் இருப்பதால் கார்ப்பரேட்டுகளும், பெரிய நிறுவனங்களும் இதனைப் பயன்படுத்தி விவசாயக் கடனை வாங்கி வருகின்றன.
அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மும்பை கிளை தவிர எந்த வங்கியும் தகவல் தர மறுத்து விட்டது. மும்பை நகரத்தில் உள்ள ஒரு கிளையில் 3 வங்கிக் கணக்குகளுக்கு 29.95 கோடி ரூபாய் விவசாயக் கடன் அளிக்கப்பட்டுள்ளது. தலா 10 கோடி வீதம் பெற்றுள்ளனர். அதே கிளையில் 9 வங்கிக் கணக்கில் 27 கோடி ரூபாய் வேளாண் கடன் செலுத்தப்பட்டுள்ளது.
மோடி தம்பட்டம்
பெரிய நிறுவனங்களுக்கு விவசாயிகளின் பெயரில் வங்கி கடன் வழங்கப்பட்டு வருவதாகக் கூறும் வேளாண் வல்லுநர் தேவேந்திர சர்மா, விவசாயிகளுக்குக் கடன் அளிப்பதாகத் தெரிவிப்பது வெறும் தம்பட்டம் என்று கூறினார்.
இலக்கை எட்ட முறைகேடு
பெரிய அளவில் கடன் வழங்குவதன் மூலம் வங்கிகள் பலனடைகின்றன. 100 கோடி ரூபாய் கடனை வழங்க குறைந்த பட்சம் 200 விவசாயிகள் தேவையாக இருப்பதால், ஒரே நேரத்தில் பெரிய நிறுவனம் ஒன்றுக்கு இதே தொகை விவசாயக் கடனாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 18 விழுக்காடு என்ற ரிசர்வ் வங்கியின் இலக்கை வங்கிகள் எளிதாக எட்டி விடுகின்றன.
வேளாண் நிதி ஒதுக்கீடு
2014- 2015 ஆம் ஆண்டு விவசாயக் கடனுக்கு ஒதுக்கப்பட்ட 8.5 லட்சம் கோடி ரூபாய், 2018- 19 ஆம் ஆண்டுகளில் 11 லட்சம் கோடியாகப் பா.ஜ.க அரசு உயர்த்தியது. விவசாயக் கடன், விவசாய உட்கட்டமைப்பு கடன், இதர ஆதாரங்கள் என்ற 3 பிரிவில் கடன் வழங்கப்படுகிறது. கிடங்கு, குளிர்சாதன அறை கட்டுவதற்கும் 100 கோடி ரூபாய் கடன் கொடுக்கிறது. வேளாண் வர்த்தகம் என்ற பெயரிலும் 100 கோடி ரூபாய் கடன் பெறப்படுகிறது.
ஆர்பிஐ
2016 ஆம் ஆண்டுக்கு முன்பும் பெரிய கடன்கள் வழங்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 2015 ஆம் ஆண்டு 604 பேருக்கு 86 கோடி ரூபாய் வீதம் 52143 கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு 91 கோடி ரூபாய் வீதம் 60,156 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் இதையே தான் பின்பற்றியதாக ஆர்டிஐ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.