ராஜஸ்தான் முதல்வரான வசூந்தரா ராஜே ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியில் 4 புள்ளி சதவீதத்தினைக் குறைத்து அறிவித்தார். இதனால் அங்குப் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 2.5 ரூபாய் வரை குறைந்தது.
இதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு திங்கட்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையினை 2 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளார்.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
இந்தியன் ஆயில் நிறுவன இணையதளத்தில் உள்ள விலை பட்டியலின் படி ஹைதராபாத்தில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 85.60 ரூபாய் என்றும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 79.22 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பானது நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது.
இழப்பு
ஆந்திர பிரதேசத்தில் செய்யப்பட உள்ள இந்த வாட் வரிக் குறைப்பின் மூலம் மாநிலத்தின் வருவாய் 1,120 கோடி ரூபாய் வரை பாதிப்படையும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய்
2013-2014 நிதி ஆண்டில் கச்சா எண்ணெய் விலை 105.52 டாலர் பேரல் என்று இருந்தது. அதுவே 46 டாலராக விலை குறையும் போது மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கவில்லை. தற்போது பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் பேரலாக இருக்கும் போது விலையை மட்டும் உயர்த்துகிறது என்று சந்திராபாபு நாயுடு கூறினார்.
ஆந்திராவில் பெட்ரோல் மீது வாட் எவ்வளவு
ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குப் பிறகு மட்டும் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் மீதான விலை 3.42 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் பெட்ரோல் மீது 35.77 சதவீதமும், டீசல் மீது 28.08 சதவீதமும் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் பெட்ரோல் விலையைக் குறைக்குமா?
தமிழ் நாட்டில் பெட்ரோல் மீதான வாட் 32.16 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் 24.08 சதவீதமாக உள்ள நிலையில் இப்போதைக்கு எடப்பாடி அரசு பெட்ரோல், டீசல் விலையினைக் குறைக்காது என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.