2017-2018 நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி பணத்திற்கு 8.55 சதவீத வட்டி விகித லாபத்தினை வருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்க வேண்டும்.
ஈபிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பனத்திற்கு ஒவ்வொரு மாதமும் வட்டி அளிக்கப்படும். ஆனால் 2017-2018 நிதி ஆண்டுக்கான வட்டி இன்னும் பலரின் பிஎப் கணக்கில் செலுத்தப்படாமல் இருப்பது சர்ச்சையாகி வருகிறது. தமிழ் குட்ரிட்டர்ஸ் வாசகர்களும் இது குறித்துத் தொடர்ந்து நம்மிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில் பிஎப் தொகைக்கான வட்டி விகிதம் தாமதமாகச் செலுத்தப்பட்டு வருவதற்கு என்ன காரணம் என இங்குப் பார்க்கலாம்.
பிஎப் வட்டி தொகை
வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் 1952 விதிகளின் படி ஈபிஎப் உறுப்பினர்களுக்கான வட்டி விகிதம் மாத அடிப்படையில் கணக்கிடப்பட்டு அந்த நிதி ஆண்டின் இறுதி நாளில் சந்தாதார்களின் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.
அதாவது 2017-2018 நிதி ஆண்டிற்கான பிஎப் வட்டி தோகையினை 2018 மார்ச் 31-ம் தேதியே பிஎப் கணக்கில் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் 6 மாதங்கள் தாமதமாகியும் செலுத்தப்படாமல் உள்ளது.
ஏன் தாமதம்?
செயல்பாடாமல் உள்ள பிஎப் கணக்குகளின் விவரங்கள் தேவைப்படுவதால் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்களைச் சரிபார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
எப்போது செலுத்தப்படும்?
எனவே 2018-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தப் பணிகள் முடிவு பெற்று வட்டி பிஎப் கணக்கில் செலுத்தப்படும் என்றும் சில மண்டலங்களில் மட்டும் ஏற்கனவே வட்டியைச் செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் நம்முடன் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் அதிகாரி ஒருவர் பகிர்ந்துகொண்டார்.
செயல்படா பிஎப் கணக்குகள் என்றால் என்ன?
செயல்படாத பிஎப் கணக்குகள் என்றால் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிஎப் பங்குகளிப்புகள் இல்லாத கணக்குகள் ஆகும்.
ஆண்டுக் கணக்கு
பிஎப் கணக்குகளின் ஆண்டுக் கணக்கு முடிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அது 2018 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் ஊழியர்கள் வருங்கால நிதி ஆணைய அதிகாரிகள் நம்முடன் பகிரிந்துக்கொண்டனர்.
வேலை விட்ட பிஎப் சந்தாதார்கள் கவனத்திற்கு
ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்களின் பிஎப் தொகைக்கான வட்டி விகிதம் மட்டும் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. எனவே அவர்களுக்குப் பிஎப் பணத்தினைத் திரும்பப் பெறும் போது சிக்கல் ஏதுமில்லை.
யாருக்கெல்லாம் தாமதமாக வட்டி அளிக்கப்பட்டு வருகிறது?
யாரெல்லாம் கடந்த நிதி ஆண்டில் இருந்து இன்னும் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்களோ அவர்களுக்குத் தான் இந்தப் பிஎப் தொகை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அது நடப்பு ஆண்டின் இறுதிக்குள் செலுத்தப்பட்டுவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரம் தாமதமாகச் செலுத்தப்பட உள்ள தொகைக்கு ஏதேனும் கூடுதல் வட்டி விகிதம் அளிக்கப்படுமா என்று மட்டும் தெரிவிக்கவில்லை.