அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மிகப் பெரிய அளவில் சர்ந்து வரும் நிலையில் அதில் தலையிட உள்ள மத்திய அரசு தங்க மீதான இறக்குமதி வரியை உயர்த்த வாய்ப்புகள் உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
தங்கம் இறக்குமதி மீதான வரியை உயர்த்தும் போது நடப்புக் கணக்கில் உள்ள பற்றாக்குறையும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் தங்கம் இறக்குமதி 3.6 பில்லியன் டாலராக இரட்டிப்பாகியுள்ளது.
திருமணச் சீசன்
திருமணச் சீசன் என்பதால் தங்கம் இறக்குமதி அதிகமாகியுள்ளது, எனவே வரும் நாட்களில் இது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சரிய வாய்ப்புகளும் உள்ளது.
நடப்பு கணக்குப் பற்றாக்குறை
இந்தியாவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை முதல் காலாண்டில் 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே மார்ச் காலாண்டில் 1.9 சதவீதமாக இருந்தது. ரூபாய் மதிப்புச் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்தப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
சரியான நேரம்
இந்தியா புல்லியன் & ஜுவல்லர்ஸ் சங்கத்தின் தேசிய செயலாளரான சுரேந்திர மேத்தா தங்கம் மீதான இறக்குமதி வரியை அரசு உயர்த்துவதற்கான சரியான நேரம் இது என்று கூறியுள்ளார். இந்த வரியை உயர்த்துவதன் மூலம் வரும் தோகையை சவரன் தங்க பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு காலத்தின் போது அளிக்கலாம். இதைச் செய்யும் போது தங்க பத்திரத்தில் செய்யும் முதலீடு அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
2013
2013-ம் ஆண்டு ரூபாய் மதிப்பு இதே போன்ற சரிவைச் சந்தித்த போது தங்கம் மீதான இறக்குமதி வரியை அப்போதைய அரசு 10 சதவீதமாக உயர்த்தியது. தற்போது இறக்குமதி வரி மட்டும் இல்லாமல் தங்கம் மீது 3 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியும் உள்ளது.
வணிகர்கள்
ஆனால் தங்க நகை கடைக்காரர்கள் விரைவில் தேர்தல் வர இருக்கும் நிலையில் மத்திய அரசு இப்படி ஒரு முடிவை எடுக்கக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.
இன்றைய தங்க விலை நிலவரம்
சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 2,932 ரூபாய் என்றும், சவரன் 23,456 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் 24 காரட் சுத்த தங்கம் கிராம் 3,079 ரூபாய் என்றும், 8 கிராம் 24,632 ரூபாய் என்றும் விற்பனை செய்து வருகின்றனர்.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு 39.80 ரூபாய் என்றும், கிலோ 39,800 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.