இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நட்டத்தில் இயங்கி வருவது மட்டும் இல்லாமல் மிகப் பெரிய நிதி பற்றாக்குறையில் சிக்கி வருவது தொடர்ந்து செய்திகளில் வந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில் விமான எரிபொருள் வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள் அதற்கான கட்டணத்தினைத் தினமும் செலுத்தினால் மட்டுமே தொடர்ந்து எரிபொருள் விநியோகம் செய்வோம் என்று ஏர் இந்தியாவை எச்சரித்துள்ளது.
பொதுத் துறை நிறுவனமாக ஏர் இந்தியா உள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 5,000 கோடி ரூபாயினை நிலுவை தொகையாக வைத்துள்ளது.
எரிபொருள் கட்டணம்
ஏர் இந்தியா நிறுவனமும் தினமும் 20 கோடி ரூபாய்க்கு விமான எரிபொருளினை வாங்கி வரும் நிலையில் கடந்த சில காலமாக அதனைத் துளி கூடச் செலுத்தாமல் உள்ளது. இதுவே எண்ணெய் நிறுவனங்கள் தினமும் கட்டணத்தினைச் செலுத்த வேண்டும் என்று அழுத்தம் தெரிவிப்பதற்கான காரணம் ஆகும்.
கடன் அடைப்பு
மத்திய அரசு ஏர் இந்தியாவிற்கு அளிக்க உள்ள மூலதனத்தினை வைத்து வெளிநாடு மற்றும் உள்நாட்டுக் கடன்களை அடைக்க முயலும் பொது எண்ணெய் நிறுவனங்கள் 5,000 கோடி ரூபாயினைச் செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.
பேச்சுவார்த்தை
ஏர் இந்தியா கடந்த 1.5 ஆண்டுகளாகவே விமான ஏரிபொருள் கட்டணத்தினைச் செலுத்தாமல் வந்துள்ளது. அன்மையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இது குறித்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறது.
ஏர் இந்தியா
பொதுத் துறை போக்குவரத்து நிறுவனமாக இருக்கும் ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து விமானச் சேவையினை வழங்க 2,000 கோடி ரூபாயினை வழங்க வேண்டும் என்று ஏர் இந்தியா மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.
நிதி திரட்டல்
மத்திய அரசு ஏற்கனவே 980 கோடி ரூபாயினை ஈவிட்டியாகவும், 2,000 கோடி ரூபாயினை வங்கிகளின் சவரன் உத்தரவாதமாகவும் அளித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் ஏர் இந்தியாவும் 2,000 கோடி ரூபாய் நிதியினைத் திரட்டியுள்ளது. அதில் 500 கோடி ரூபாயினை முதற்கட்டமாக ஏர் இந்தியா எண்ணெய் நிறுவனங்களுக்குச் செலுத்தும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றனர்.
ஏர் இந்தியா நிறுவனம் 45,000 கோடி ரூபாய் கடனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.