அப்போது முதல் இடம் யார் என்று கேட்கிறீர்களா...? இத்தாலி. வங்கிகளின் (banking system) பேலன்ஸ் ஷீட்டில் இருக்கும் வாராக் கடன்கள், பிரச்னைக்குரிய கடன்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இதைக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.
சற்று விளக்கமாக
ஒரு வங்கியின் முதல் அடிப்படைப் பணியே, தேவையானவர்களுக்குக் கடன் கொடுத்து அதை வட்டியோடு ஒழுங்காக வசூலிப்பது. இந்த விஷயத்தில் இந்திய வங்கிகளைப் பற்றி நாம் அதிகம் பேச வேண்டியதில்லை. 100 ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதில் எவ்வளவு ரூபாய் வாராக் கடனாக, பிரச்னைக்குரிய கடன்களாக எழுதி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் இதை கணித்திருக்கிறார்கள்.
எவ்வளவு கடன் பாக்கி
ஒட்டு மொத்தமாக இந்திய வங்கிகளில் 210 பில்லியன் டாலர் (14,70,000 கோடி ரூபாய்) ஸ்ட்ரெஸ்ஸுட் அஸெட் என்றழைக்கப்படும் வாராக் கடன்கள் அல்லது பிரச்னைக்குரிய கடன்களாக தங்களுடைய பேலன்ஸ் ஷீட்களில் தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போது மத்திய ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகளோடு மீட்கக் கூடிய நிலையில் 3.6 லட்சம் கோடி ரூபாயை முதலில் வசூலிக்கவோ மறுசீரமைப்புச் செய்யவோ சொல்லி இருக்கிறது. 2018 - 19 இந்திய பட்ஜெட்டில் குறிப்பிட்டிருக்கும் 21 லட்சம் கோடி வருவாயில் இந்த 3.9 லட்சம் கோடி ரூபாய், சுமாராக 16 சதவிகிதம். இந்த தொகை இருந்தால் நம் பட்ஜெட் பற்றாக் குறையே பெரும் அளவில் குறைந்துவிடும்.
இதனால் என்ன பிரச்னை
பல பிசினஸ் இழுத்து மூட வேண்டி வரும், அல்லது வேறு நிறுவனங்களிடம் இந்த நிறுவனத்தை விற்று இருக்கும் கடனை வசூலிக்க வேண்டி இருக்கும். அப்படியும் இல்லை என்றால் ஓரளவுக்கு நல்ல பிசினஸ் என்றால் கடன் வாங்கியவர்களே தங்கள் நிறுவனத்தை வேறு நிறுவனத்தோடு மெர்ஜர் செய்தோ அல்லது வேறு ஒரு நல்ல நிறுவனத்தை அக்வசிஷன் மூலம் கையகப்படுத்தியோ, கடனைத் திருப்பி அடைக்க வேண்டும்.
மெர்ஜர் & அக்வசிஷன்
மெர்ஜர் என்றால் ஒரு நிறுவனத்தோடு மற்றொரு நிறுவனத்தை இணைப்பது. அக்வசிஷன் என்றால் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்துவது. அவ்வளவு தான். இந்தியாவில் கடந்த 2013-ம் ஆண்டும் வெறும் 35 பில்லியன் டாலருக்கும் குறைவான மெர்ஜர் & அக்வசிஷன்களே நடந்தன. ஆனால் இந்த 2018-ல் இதுவரை 110 பில்லியன் டாலருக்கு மேல் மெர்ஜர்& அக்வசிஷன் நடந்திருக்கின்றன.
இனியும் ஏன் மெர்ஜர் & அக்வசிஷன்
இனியும் இந்த டிரெண்ட் மேல் நோக்கியே தொடரும் என்று பி.டபிள்யூ.சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த மெர்ஜர் & அக்வசிஷனை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான விஷயம் இந்திய வங்கிகளிடம், நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பித் தராமல் இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை தான். மத்திய ரிசர்வ் வங்கியும், தனக்கு கீழ் உள்ள அரசு வங்கிகளிடம் கடனை கறாராக வசூலிக்க அல்லது புதிய Insolvency and Bankruptcy Code-ன் கீழ் கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன.
சமீப கடன் குறைப்புக்கள்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை விற்று 47,000 கோடி ரூபாய் கடன்களை அடைக்கத் திட்டமிட்டு இருப்பது, முகேஷ் அம்பானியின் ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் நிறுவனத்தையே விற்று சுமார் 14,000 கோடி ரூபாய் கடன்களை அடைக்க திட்டமிட்டு இருப்பது. ஆதித்யா பிர்லா நிறுவனம் தன் ரீட்டெயில் அவுட் லெட்களான மோர் ஃபார் யூ (More For You)-வை சமரா என்கிற நிறுவனம் மூலம் அமேஸானுக்கு விற்று 4,200 கோடி கடன் அடைக்க திட்டமிட்டு இருப்பது என்று பட்டியல் பெருகிக் கொண்டே செல்கின்றன.
பிர்லாவின் பார்வை
இந்தியாவில் வாங்கிய கடனை திரும்ப வசூலிப்பதில் அரசு காட்டி வரும் தீவிரம் பாராட்டுக் குரியது. அதோடு எங்களுக்கு வட்டி செலவீனங்களை சமாளிப்பது சிரமமாகவே உள்ளன. எனவே என்னுடைய அடுத்த டீல்கள் எல்லாம் இப்படி பிரச்னைக்குரிய கடன்களை தீர்ப்பதில் தான் கவனம் செலுத்த இருக்கிறேன்" என்றார் குமார மங்களம் பிர்லா.
அனில் அம்பானி
"வரும் 2020-ல் இருந்தாவது எங்கள் அனில் த்ருபாய் அம்பானி குழும நிறுவனங்கள் கடன் இல்லாத சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தன்னுடைய நிறுவனத்தின் Annual General Meeting என்றழைக்கப்படும் ஆண்டு இறுதிப் பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாகக் கூறினார்.
இந்தியாவில் இவர்களைப் போன்ற பெரிய ஜாம்பவான்களுக்கே இந்த நிலை என்றால் நேற்று இன்று பிசினஸ் செய்யத் தொடங்கும் நபர்களின் நிலை எப்படி இருக்கும்.