என்னது சொத்து பத்துக்கள் வேண்டாமா என்று கேட்டால், ஆம் எனக்கு என்னுடைய சொத்து பத்துக்கள் எதுவுமே வேண்டாம் என்று தலை குனிந்து எதையோ யோசிக்கிறார்? யார் இவர். இவருக்கும் L and T க்கும் என்ன சம்பந்தம்.
எல்&டி
லார்சன் அண் டியூப்ரோ (எல் & டி), 1938-ம் ஆண்டு இரண்டு டென்மார்க்கை இன்ஜினியர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் இந்த எல்& டி என்கிற லார்சன் அண்ட் டியூப்ரோ. இந்தியாவின் மிகப் பெரிய இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம். இந்தியாவின் டாப் 50 நிறுவனங்களில் ஒன்று. நிஃப்டி 50-ன் 50 பங்குகளில் இந்த நிறுவன் பங்கும் இருக்கிறது. இந்தியாவில் பல குறிப்பிடத் தகுந்த கட்டுமானங்களை கட்டி இருக்கிறது. உதாரணமாக தில்லி லோட்டஸ் டெம்பிள், மும்பை வான்கடே ஸ்டேடியம், தில்லி விமான நிலையம் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
வேறென்ன துறைகள்
பொறியியல், டெக்னாலஜி, கட்டுமானம், நிதி சேவைகள், தகவல் தொழில்நுட்பம் என்று சுற்றி சுற்றி பிசினஸ் செய்து கொண்டிருக்கும் ஒரு நல்ல நிறுவனம். நாயக் 2003-ல் இருந்து தலைவராக எல் & டி-யை வழி நடத்தி வருகிறார்.
மொதல்ல இங்கிலீஷ் படி... வந்துட்டான்
இந்த குஜராத்தி ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி. பிர்லா விஸ்வகர்மா மஹாவித்யாலயா தான் இவர் படித்த கல்லூரி. படித்த கையோடு முகந்த் அயர்ன் & ஸ்டீல் வொர்க்ஸ்-ன் பொறியியல் பயிற்சித் திட்டத்துகு விண்ணப்பிக்க "போய் மொதல்ல இங்கிலீஷ் படி" வந்துட்டான் இன்ஜினியரிங் படிக்கிறதுக்கு என்று விரட்டியது. அப்படியா சரிங்க என்று இவரும் விரட்டி விரட்டி ஆங்கிலத்தை முறையாகப் படித்தார்.
முதல் வேலை
1963 - 64 கால கட்டத்தில் நெஸ்ட்லர் அல்லது (நெஸ்டர்) பாயிலர்ஸ் என்கிற நிறுவனத்தில் சேர்ந்தார். நிர்வாகம் சொதப்பித் தள்ள, இவரும் வெறுப்படைந்து வெளியேறினார்.
அதிர்ஷட தேவதை எல் & டி
15 மார்ச் 1965. எல் & டியில் இளநிலைப் பொறியாளராக பணியில் சேர்கிறார். நல்ல பொறியியல் திறமை, கடுமையான உழைப்பு... இப்படி க்ளிசேவாக ஒரு சராசரி ஊழியனுக்கு என்ன எல்லாம் இருக்குமோ எல்லாம் இருந்தது. அதோடு ஒரு விஷயம் எக்ஸ்ட்ராவாக இருந்தது. பிசினஸ்.
அந்த எக்ஸ்ட்ரா திறமை
ஒரு ப்ராஜெக்டை எடுத்துக் கொடுத்தால் சூப்பராக செய்வது எந்த நல்ல இன்ஜினியராலும் முடியும். ஆனால் அந்த ப்ராஜெக்ட்களை எப்படிப் பிடிக்க வேண்டும். அதற்கு எப்படி நம் பிரசன்டேஷன்களை தயார் படுத்த வேண்டும், கிடைத்த ப்ராஜெக்ட் மூலம் அடுத்த ப்ராஜெக்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று இவர் ஒரு தனி ஆங்கிளில் யோசித்து முதலாளி சீட்டுக்கு தன்னை அறியாமலேயே தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தார்.
இருபது ஆண்டில்
1986-ல் நாயக் ஒரு பிரிவின் பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றிருந்தார். அடுத்த 13 வருடத்தில் சி.இ.ஓ, அடுத்த நான்கு வருடத்தில் தலைவர். இது தான் ஏ.எம்.நாயக்கின் ப்ரொமோஷன் கிராஃப். இதில் வேடிக்கை என்ன என்றால் தன்னுடைய ஓய்வு கால சம்பளம் அநேகமாக 1000 ரூபாய் இருந்தால் பெரிது என்று தான் எல் & டியில் வேலைக்கு சேர்தார் நாயக்.
1000 ரூபாய் சம்பளமா...?
நம் இந்தியர்கள் பில்லியனர்களைப் பற்றி செய்தி போட்டால் வெறி கொண்டு படிப்பார்கள், ஆனால் "உங்களுக்கு எவ்வளவு காசு சேர்க்கணும்" என்றும் கேட்டால்... ஒரு கோடி ரூபாய் பேங்குல இருந்தா போதுங்க, சும்மா ஜம்முன்னு வாழ்ந்துடுவேன் என்று தான் சொல்வார்கள். அந்த மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டியோடு தான் நாயக்கும் தன் ஊழியர் வாழ்கையில் எல் & டியில் தொடங்கினார். ஆனால் அவர் நேரம் சுப முகுர்த்தமாக இருந்ததால் 12-வது மாதத்திலேயே 1025 ரூபாய் சம்பளம் வாங்கத் தொடங்கிவிட்டார்.
பங்குகளும் சம்பளமா...?
பல நிறுவனங்கள், ஒரு ஸ்டேஜுக்கு மேல் வளரும் ஊழியர்களுக்கு, காசாக சம்பளத்தைக் கொடுக்காது. ஸ்டாக் ஆப்ஷன் என்று சொல்லப்படுகிற பங்குகளைத் தான் சம்பளமாகவோ, போனஸாகவோ கொடுக்கும். நமக்குத் தேவை என்றால் அந்த பங்குகளை சந்தையில் விற்று காசாக்கிக் கொள்ளலாம். நாயக்கு வந்த பங்குகளை விற்கவில்லை. எல் & டி தவிர எல் & டி இன்ஃபோடெக் போன்று எல் & டியின் துணை நிறுவனப் பங்குகள் வேறு நாயக் பையில் சேர்ந்த வண்ணமே இருந்தன. இதை எல்லாம் கவனிக்க நாயக்குக்கு நேரமில்லாததால், தன் சொத்துக்களை நிர்வகிக்க ஒரு நிதி நிறுவனத்தை நியமித்துவிட்டார்.
சம்பளம் எவ்வளவு?
தற்போது ஆண்டுக்கு சுமார் 3 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார். இவர் தலைவர் பதவியில் இருந்து கெளரவத் தலைவர் பதவிக்கு மாற்றப்பட்ட போது ரூ.32.21 கோடி ரூபாய் விடுமுறை சம்பளமாக, ரூ.38.04 கோடி ஓய்வுகாலத்தின் வழங்கப்பட வேண்டிய சலுகைகளாக, ரூ.19.27 கோடி சலுகைகளாக மற்றும் ரூ.18.24 கோடி இவருக்குச் சேர வேண்டிய கமிஷன் தொகையாக கொடுக்கப்பட்டது.
மொத்தம் எவ்வளவு சொத்து
இவருக்கு 2016-ம் ஆண்டு நிலவரப்படி 400 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் ஏற்கனவே 75% சொத்துக்களை தானம் செய்துவிட்டார். நாயக் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஸ்கில் டிரெயினிங் என்கிற டிரஸ்ட் மூலம் கல்விச் சேவை செய்து வருகிறார். நிராலி நினைவு மருத்துவ சங்கம் மூலம் எல் & டி ஊழியர்களுக்கும், ஏழை மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க தன் சொத்தை தானம் செய்திருக்கிறார். இந்த மருத்துவமனை கட்டுமானத்தில் இருக்கிறது.
தடுக்காத மகன் மகள்
தன் 100 சதவிகித சொத்தை தானம் செய்வதற்கு தன் மகன் மகள் இருவருமே ஓகே சொல்லி இருக்கிறார்களாம். பாக்கி காலங்களை தங்களோடு அமெரிக்காவில் கழிக்கச் சொல்லி அவர்களும் நாயக்கிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இல்லப்பா... இந்த கட்ட இங்க தான் வேகணும்... என் பேத்தி பேர்ல நடத்துற ஆஸ்பத்திர்ய பாத்துக்கணும் நறைய வேல இருக்கு என்று மகன்மகள் களை இந்தியா வரச் சொல்கிறாராம்.
மனைவி பெயரில் ஒரு வேத பாடசாலை
செய்த தானப் பணத்தில் ஒரு பகுதியை தன் மனைவி பெயரில் ஒரு வேத் பாட சாலையையும் அமைத்து, நடத்தி வருகிறார். இவருக்கு ஊர் செண்டிமெண்டும் ரொம்ப ஜாஸ்தி, தன் தான தருமங்களை எல்லாம் தான் பிறந்த இடம் அல்லது தான் வேலை பார்த்த இடத்திலேயே தான் செய்து வருகிறார்
மகன் மகள்:
மகன் கூகுளில் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவிலெயே செட்டில் ஆகிவிட்டார். மகளும் திருமணம் காரணமாக அமெரிக்கா சென்றுவிட்டார். மகள் ஒரு மருத்துவர் என்பதால் அங்கேயே மருத்துவ சேவை செய்து வருகிறாராம்.
வெளிநாடு வேண்டாம்
தன் பேத்தி புற்றுநோயால் இறந்ததால், அவள் நினைவாக (நிராலி மருத்துவமனை) மருத்துவமனை அமைக்க தன் பாக்கி உள்ள சொத்துக்களையும் தானம் செய்யத் தயாராக இருக்கிறார். எனவே தன் மகனையும், மகளையும் இங்கு வரும் படி தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
என் தப்பு தான்
"என் மகன் படித்துக் கொண்டிருக்கும் போது, அவனோடு நேரம் செலவழிக்க முடியமல் அவனை அமெரிக்கா அனுப்பியது என் தவறு தான். இப்போது எப்படியாவது அதை சரி செய்ய முயற்சிக்கிறேன். நடந்து விடும் என்று நம்புகிறேன். என் மகன் என்னோடு இந்தியாவில் என் அருகில் வந்து அமர்வான்" என்று பாசத்துக்காகத் தலை குனிந்து காத்துக் கொண்டிருக்கிறார் இந்த கன்ஸ்ட்ரக்ஷன் காந்தம்.
"The house is made up of Stones, cements, woods and other materials, But the home is made up of love and joy only" என்றொரு பழமொழி உண்டு. அது நம் ஏ.எம்.நாயக்குக்கு பக்காவாக பொருந்துகிறது.