கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய வங்கி நிறுவனங்கள் வாரா கடனில் சிக்கி தவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அந்த வங்கிகளின் மூத்த அதிகாரிகள், திறமையானவர்கள் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் கனரா வங்கிகளில் பணி உயர்வின் போதும் செல்ல விரும்புவதில்லை.
அன்மையில் நடைபெற்ற பொதுத் துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகளுக்கான நேர்கானளில் பங்கேற்ற 30 நபர்களும் சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியையே தேர்வு செய்ய விரும்பினார்கள்.
கடைசியில் இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி பதவியினைக் கிஷோர் கரத்திடம் இருந்து பத்மஜா சந்ரு தட்டிச்சென்றார். இப்படிப் பலரும் இந்தியன் வங்கியில் சேர விரும்பியதற்கு முக்கியக் காரணங்கள் உள்ளன.
பலவீனமான வங்கி
20 ஆண்டுகளுக்கு முன்பு பலவீனமான வங்கி பட்டியலில் இருந்த சென்னையினைச் சேர்ந்த இந்தியன் வங்கி தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக லாபம் பெற்ற வங்கி நிறுவனமாகும். நடப்பு ஆண்டில் 21 பொதுத் துறை வங்கிகளில் 19 வங்கிகள் நட்டத்தினைப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வாரா கடன்
பொதுத் துறை நிறுவனங்களின் வாராக்கடன் சராசரி 11.6 சதவீதமாக உள்ள நிலையில் இந்தியன் வங்கியின் வாரா கடன் 7.37 சதவீதமாக உள்ளது. பிற பொதுத் துறை வங்கிகளின் வாரா கடன் அளவு இரட்டை இலக்க சதவீத்தில் உள்ள என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
லாபம்
2017-2018 நிதி ஆண்டில் இந்தியன் வங்கி 1,259 கோடி ரூபாய் லாபத்தினைப் பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் விஜயா வங்கி லாபத்தினைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியன் வங்கி கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து லாபத்துடன் இயங்கி வருகிறது என்பது சிறப்பம்சம்.
முதலீட்டாளர்கள்
இந்தியன் வங்கியின் இந்தத் தனித்தன்மையால் முதலீட்டாளர்கள் பெறும் அளவில் இங்கு முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதிலும் மத்திய அரசுக்கு இந்த வங்கியில் அதிகபட்சமாக 82 சதவீத பங்குகள் உள்ளன.
பியூஷ் கோயல்
சென்ற ஆகஸ்ட் மாதம் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் வங்கிகள் நெருக்கடியில் உள்ள சமயத்தில் இந்தியன் வங்கியைப் பார்த்து பிற வங்கிகள் தெரிந்துகொள்ள வேண்டும். பலவீனமான வங்கி எப்படி நடந்துகொள்கிறது பாருங்கள் என்றும் குறிப்பிட்டார்.
வர்மா கமிட்டி
1990-ம் ஆண்டு வர்மா கமிட்டி இந்தியன் வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனைட்டட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகள் பலவீனமான வங்கிகள் மறு சீரமைப்புத் திட்டங்களைப் பரிந்துரைத்தது. 1995-9196 நிதி ஆண்டில் இந்தியன் வங்கி 1,727 கோடி ரூபாய் நட்டத்தினைப் பதிவு செய்தது. பின்னர் மத்திய அரசு அளித்த மறு மூலதனம் மூலம் தாக்குப்பிடித்தது.
ஐபிஓ
பின்னர் இந்தியன் வங்கி உயிர்பெற்றுச் சிறந்த வங்கி கொள்கைகள் மூலம் 2007-ம் ஆண்டு ஐபிஓ மூலம் பங்குகளைச் சந்தையில் வெளியிட்டது.
ரஞ்சனா குமார்
இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ரஞ்சனா குமார் முதல் முறையாக ஒரு பொதுத் துறை வங்கியின் பெண் தலைவராகப் பொறுப்பேற்று 2,000 ஆண்டு வங்கியைச் சுத்தம் செய்தார். வார கடன்களை வசூலித்தார். சில்லறை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி வங்கியின் கடன் புத்தகங்களைச் சீரமைத்தார். அவரது பதவி காலத்தில் நட்டத்தில் இயங்கி வந்த 100 வங்கி கிளைகளை இணைத்தது, ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது, விருப்ப ஓய்வு அளித்தது போன்றவை மிகப் பெரிய அளவில் வெற்றியை அளித்தது.
பின்னர் இந்தியன் வங்கியின் தலைவராகப் பொறுப்பேற்றவர்களும் அவரைச் சரியாகப் பின்பற்றி ரீடெயில் வங்கி சேவையில் திறன்பட வழிநடத்தினர்.
வாரா கடன் எப்படி வசூலிக்கப்பட்டது?
தினமும் வங்கியில் முக்கிய அதிகாரிகள் இடையிலான குழு காலை 9:30 மணியளவில் கூடி 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்களை வைத்துள்ளவர்கள் குறித்து ஆய்வு நடத்தி அதனை எப்படி வசூலிப்பது என்ற முடிவுகளை எடுப்பார்கள். பின்னர் இது வரம்பு 5 கோடி என்றும், 10 கோடி ரூபாய் என்றும் அதிகரித்தது என்று ரஞ்சனா குமாருக்கு அடுத்து இந்தியன் வங்கி தலைவர் பொறுப்பினை ஏற்ற பாஷிம் தெரிவித்தார்.
சில்லறை கடன்களை ஓர் அளவிற்கு வசூலித்த உடன் கார்ப்ரேட் கடன்கள் மீது வங்கி நிறுவனம் தீவிரமான கவனத்தினைச் செலுத்தியது என்றும் கடன் அளிப்பதில் கடுமையான விதிகளைப் பின்பற்றியதாகவும் பாஷிம் கூறினார்.
டிவிடண்ட்
2006-2012 ஆண்டுகளில் வாரா கடன் குறித்து வங்கி எடுத்த முடிவுகளால் இன்று நட்டத்தில் இருந்து மீண்டு முதலீட்டாளர்களுக்கு டிவிடண்ட் அளிக்கும் நிறுவனமாக இந்தியன் வங்கி வளர்ந்துள்ளது.