நீங்கள் படித்தது சரி தான். இந்திய விவசாயிகளின் அவலக் குரலை, நிர்வாண நிலையை, ஆதரவற்ற அறுவடைகளை இந்திய அரசு கேட்டதோ இல்லையோ, ஜப்பான் அரசு கேட்டிருக்கிறது. விளைவு இந்தியாவின் புல்லட ரயில் திட்டத்துக்கு வழங்கி வந்த நிதியை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது.
புல்லட் ரயில் திட்டம்
குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் இருந்து, மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை வரையிலான அதிவேக புல்லட் ரயில் திட்டம் வரும் ஆகஸ்ட் 2022-ல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை 2020க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்துதல், ஜப்பானில் இருந்து நிதி உதவி வரும் தவனைகளைக் கணக்கில் கொண்டு 2022க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மொத்த பட்ஜெட்
இந்த 508 கிலோமீட்டர் புல்லட் ரயில் திட்டத்தைச் செயல்படுத்த சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று Natioanal High Speed Rail Corporation Limited (NHSRCL) என்கிற இந்திய அரசு அமைப்பு கணக்கிட்டுச் சொன்னது. இந்த NHSRCL இந்தியாவில் புட்டல் ரயில் திட்டம் தொடர்பான விஷயங்களைக் கையாள்கிறது. ஜப்பானின் Japan International Cooperation Agency (JICA) என்கிற அமைப்பு புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியில் 80,000 கோடி ரூபாய் வரையான நிதியை வழங்க ஒப்புக் கொண்டது.
விவசாயிகள் போராட்டம்
ரயில் பாதையின் நீளம் 508 கிலோமீட்டர். அதில் 110 கிலோமீட்டர் பல்கார் என்கிற மகாராஷ்டிர ஊருக்குள் செல்கிறது. புல்லட் ரயிலுக்குத் தேவையான பல்கார் பகுதி நிலத்தைக் கையகப்படுத்த அரசுத் தரப்பு வந்த போது ஊர் மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதே போல் குஜராத்தின் எட்டு மாவட்டங்களில் இருந்து சுமாராக 850 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டி இருக்கிறது. இதற்கும் குஜராத் விவசாயிகளும் மிகக் கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.
நிலுவையில் வழக்கு
குஜராத் மற்றும் மகாராஷ்டிர விவசாயிகள் தங்கள் நிலத்தைக் காப்பாற்றித் தரும் படி குஜராத் உயர் நீதி மன்றத்தை நாடி இருக்கிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நின்றுவிடாமல், விவசாயிகள் ஒரு படி மேலே போய், புல்லட் ரயிலுக்கு நிதி கொடுக்கும் ஜப்பானின் JICA அமைப்புக்கு இந்திய விவசாயிகள் பிரச்னை குறித்து ஒரு கடிதத்தையும் எழுதி இருக்கிறார்களாம். இதை பிஜேபியினரும் ஒப்புக் கொண்டார்கள். இதுவரை எல்லாமே உண்மை தான். ஆனால் இனி வருவது எல்லாம் நடந்ததா இல்லையா என உறுதியான செய்திகள் வெளியாகவில்லை.
தவனைகள் ரத்து
ஜப்பானின் JICA அமைப்பு விவசாயிகளின் கடிதத்தைப் பார்த்துவிட்டு மேற்கொண்டு கொடுக்க வேண்டிய தவனைகளை ரத்து செய்திருக்கிறதாம். இதுவரை JICA இடம் இருந்து வெறும் 125 கோடி ரூபாய் மட்டுமே வந்திருக்கிறதாம். "இந்திய விவசாயிகள் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டுவிட்டு இந்த திட்டத்துக்கான் நிதியை கேட்கலாம் என்று சொல்லி இருக்கிறதாம் ஜப்பானின் JICA".ஜப்பானின் இந்த பதிலுக்குப் பின் ஒரு தனி கமிட்டி அமைத்து விவசாயிகள் பிரச்னையை தீர்குமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது என நிதி அமைச்சக வட்டாரங்கள் சொல்கின்றன.
நஷ்ட ஈடு உயர்த்த முடியாது
இந்த நிலங்களை கைப்பற்றியே ஆக வேண்டும். இந்த ரூட்டைத் தவிர வேறு ரூட் எடுப்பது எல்லாம் புல்லட் ரயிலின் பட்ஜெட்டைப் பாதிக்கும். அதோடு நிலங்களுக்கான நஷ்ட ஈடும் உயர்த்த முடியாது. அப்படி உயர்த்தினாலும் புல்லட் ரயிலின் பட்ஜெட் இடிக்கும் என்று செய்திகள் கசிகின்றன.
NHSRCL மறுப்பு
NHSRCL அமைப்பும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலும் இந்த செய்திகளை மறுக்கின்றனர். எங்களுக்கு ஜப்பானிடம் இருந்து வர வேண்டிய நிதி முழுவதும் வந்துவிட்டது" என்கிறார்கள். ஆனால் அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் பத்திரிகையாளர்களிடம் சமர்பிக்கவில்லை.
வீடியோ
வீடியோ